உங்களோடு சில வார்த்தைகள்
வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட ஜூலை-19 முன்னெப்போதையும் விட இந்நேரம் அதிக கவனத்தைக் கோருகிறது. ‘கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்,` என்றானே மகாகவி, அடுத்தடுத்து வரும் மத்திய ஆட்சியாளர்கள் மேற்படி ‘தர்மத்தையே' செய்து வருகின்றனர். அவர்களது விசுவாசம் உலகப் பொருளாதார சூத்திரதாரியின் திருவடிகளில் சரணடைந்திருக்கிறது. வங்கிகளைக் காப்பது, சாதாரண மக்களின் சேவையில் அவை நீடிப்பது, ஊழியர் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வது எல்லாமே இந்த வலைப்பின்னல்களில் சிக்கிக் கொண்டு துடிப்பதை உணர வேண்டும்.
இந்த சதி வலைகளின் சமீபத்திய தரிசனமாக வந்ததுதான் ‘நிமிட்ஸ்' கப்பல். உலகு நெடுக அப்பாவி மக்கள் உயிரைக் குடித்து பவனி வரும் ஒரு நாசகர வாகனத்தை நமது பெரு ஊடகங்கள் (Mass Media) சித்தரித்த விதம் காலத்திற்கும் நாம் வெட்கப்பட வேண்டியது. பச்சிளம் குழந்தைகளைக் குண்டு வீசிக் கொல்கிற அரக்கர்கள் ஓய்வெடுக்கிற பாவனையில் ஏழை பாழைகளின் சேரிகளில் தூய்மைப் பணி செய்ய இறங்கியது எவ்வளவு கொடிய மூளைச் சலவை! இடதுசாரிகள், பல்துறை அறிஞர்கள், தொழிலாளி வர்க்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைக் கூட ஏளனக் கண்களோடுதான் இந்த ஏகாதிபத்திய ரசிகர்கள் பதிவு செய்தனர்.
விடுதலை போராட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வின்தரமும், ஆவேசமும் இப்போது தென்படாததன் காரணம் நமக்குள் நாம் அறிந்தும், அறியாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பண்பாட்டு அரிப்புகளாகும். அவரவர்க்கும் தனித்தனியாக பிரச்சினைகளுக்குத் தீர்வும், நிம்மதியும் சாத்தியமென்று நாம் நம்புவதன் வேரும் இந்தப் புள்ளியில் தேடினால் சிக்கும். மாற்றங்களுக்கான போராட்டத்தை இந்த தளத்தில் நடத்த வேண்டும்.
***
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆட்சியில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இடது முன்னணி, மனிதகுல முன்னேற்றத்தில் காதல் கொண்டிருப்போரின் வாழ்த்துக்குரியதாகும். அதிகாரப் பகிர்வு, பஞ்சாயத்து முறையின் அபாரமான செயல் விளக்கமாய் பல்லாயிரம் பெண்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்பது, தொழிலாளர்க்கு வேலை நிறுத்த உரிமை, நிலச்சீர்திருத்ததை உளப்பூர்வமாக நாட்டிலேயே முன்னணி மாநிலமாய் அமலாக்கியது....... என ஏராளமான மைல் கற்கள்! முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் இந்த அரிய வரலாற்றைக்கூட சிங்கூர் - நந்திகிராம் பற்றிய தமது பார்வையில் இருந்து அணுகினாலும், சாதனையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. தீரமிக்க தோழராய் நிற்கும் ஜோதிபாசுவின் ‘உயரத்தை' யாருமே அண்ணார்ந்து பார்த்து வியந்த உற்சாகக் கொண்டாட்டங்கள், மாற்று அரசியல் திசைவழி குறித்த விவாதத்தைக் கூர்மைப்படுத்துகின்றன.
***
ஜூலை மாதம் மகத்தான புரட்சிகர பெண்மணி விமலா ரணதிவே (மறைவு:1999) அவர்களின் போர்க்குண நினைவுகளோடு தோழமைப் புன்னகைகளையும் சுமந்து வருகிறது. உழைக்கும் பெண்கள் இயக்க ஸ்தாபகத் தலைவரான விமலா, கப்பற்படை எழுச்சியின் போது மும்பை நகரில் போராடிய வீரர்களுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் பணியில் துப்பாக்கிக் குண்டுகளை மிக அருகில் சந்தித்து மீண்டவர். விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டு பல தியாகிகளின் நினைவு சூழும் மாதமிது.
கல்வியாண்டின் துவக்க நேரத்து நெருக்கடிகள் தொடர்கின்றன. அன்றாடத் தேவைகளின் விலைகள் தொடர்ந்து ஆட்டம் காட்டுகின்றன. இவற்றிலிருந்து நம்மை திசை திருப்பும் திட்டமிட்ட ஏற்பாடுகளில் தற்போது ஒரு திரைப்படம் (சிவாஜி) தலைமை வகிப்பது பண்பாட்டு ரசனையின் மீதான வன்முறையாக வருணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் மானுடம் தழைக்கும் என்ற நம்பிக்கைகளின் தொகுப்பாய் மலர்கிறது இந்த இதழ்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|