ஒளிமயமான விடியல் நிச்சயம் பிறக்கும்
ஏ.பி.பரதன்
கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 9.2% வளர்ச்சி கண்டது. அடுத்து 10% ஆக்க முயற்சி நடக்கிறது. சென்செக்ஸ் 15000 புள்ளிகளை எட்டிவிட்டதான குதூகலிப்பில் இருக்கிறார் நிதியமைச்சர். அந்நிய செலாவணி கையிருப்பு முன் எப்போதுமில்லாத அளவு அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு வந்த வண்ணமுள்ளது.
எல்லாம் சரி, இதன் பயனாளிகள் யார்? யாருக்கான வளர்ச்சி இது? மேல் மட்டத்திலிருக்கும் 10-15% பேருக்குத்தான்! அவர்களுக்கு 9.2% வளர்ச்சி. தமது வாழ்க்கை நிலையில் 100% உயர்வு. மீதி 85% மக்களுக்கு கேவலம் 0.2% உயர்வு!
வளர்ச்சியின் பயலன் படிப்படியாகக் கீழிறங்கும் Trickle-Down Effect) என்பதெல்லாம் வெறும் காகிதத்தில்தான்!. பூர்ஷ்வா பொருளாதார மேதாவிகளின் கட்டுரைகளில்தான்! இந்த வளர்ச்சி வறுமையை ஒழிக்க வேண்டாம், குறைக்கவாவது செய்திருக்கிறதா-இல்லை. பசி, பட்டினி கொடுமைக்கு முடிவு கட்டியிருக்கிறதா? இல்லை. வேலை இல்லாத் திண்டாட்டத்தைத் குறைத்ததா? இல்லவே இல்லை. சாதாரண மக்களுக்கு சுகாதாரம் உறுதி செய்து தந்து அவர்களைத் தாக்கும் பிணிகள், நோய்களிலிருந்து பாதுகாத்ததா? இல்லையே... சிசு மரணத்தைக் குறைத்ததா, இல்லை.. எல்லோர்க்கும் கல்வி என்ற நிலை உருவாக்கி, குழந்தைகள் வேலைக்காக மிட்டாய்க் கடைகளுக்குச் சென்று கொண்டிராமல், பள்ளிகளுக்குச் செல்கிற முன்னேற்றம் உண்டா, இல்லை,. இல்லை, இல்லவே இல்லை.
என்ன நிலவரம் என்பதை (கீழ்வரும்) உண்மைகளே பேசக் கேளுங்கள்.
* 600 கோடி உலக மக்களில் 130 கோடி பேர் பட்டினியில் உழலும் கொடிய வறுமை.
* 80 கோடி பேருக்கு இரவு உணவு கிடைப்பதில்லை இதில் 31.5 கோடி பேர் இந்தியர்கள்.
* உலகில் 25 கோடி குழந்தை உழைப்பாளிகள்.
* வளரும் நாடுகளில் 13 கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசலை மிதித்தறியாதவர்கள். சுத்தமான குடிநீரின்றி ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகள் 32 லட்சம். 3 கோடி பேர் தெருவோரக் குழந்தைகள்.
* 100 கோடி பேர் எழுத்தறிவற்றவர் - 10 கோடி பேர் வீடற்றவர்கள். ILO கணக்குப்படி, 82 கோடி பேர் வேலையிழந்தும், முழுமையான வேலையற்றும் தவிக்கின்றனர்.
வளர்ச்சியின் பலன் படிப்படியாய் கீழ்மட்டம் வரை சொட்டும் என்று முதலாளித்துவம் தோன்றி 300 ஆண்டுகளான பின்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாம் விமர்சிக்கிறோம். மாற்று, என்ன என்று கேட்கிறார்கள்!
அது ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட பொருளாகக் கிடைக்காது- அதுவும் அதற்கான போராட்டமே இன்னும் துவங்க வேண்டி இருக்கும் போது! மாறாக, இன்றைய சமூக நிலையை மாற்றுவதற்கான போராட்டத்தில்தான் அது ஒரு வடிவம் பெறும். மூலதன உலமயமாக்கலுக்கு எதிரான போர் ஒரு பரந்த மக்கள் இயக்கமாக மலர்ந்து இன்று முதலாளித்துவத்தின் சக்தியோடு மோதிக் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட கட்சி, இயக்கம், ஒரு அமைப்பு சார்ந்து மட்டும் இல்லை இந்த போராட்டம். ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த சார்பின் உந்துதலால் மட்டுமே கூட இல்லை இது. ஆனால், புதிய தாராளமயக் கொள்கைளுக்கு எதிரான கொதிப்பின் மேடையில் நடக்கிறது. முதலாளித்துவத்திற்கும், ஏக போகத்திற்கும் எதிரானது இது. இன்னும் எந்த வழியில் அது பயணிக்குமென்பது கூட தெளிவற்ற நிலைதான். ஆனால், தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், முக்கியமாக இளைஞர்கள் திரள்கின்ற போராட்டம் இது. (எதிர்காலம் குறித்த) கேள்விகளுக்கு இவர்கள் பதில் தேட சக்தி படைத்தவர்கள்தான்.
ஒளிமயமான ஓர் விடியல் நிச்சயம் நிகழ்ந்தே தீரும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|