மாறன், ராஜா சேவை யாருக்காக?
எஸ்.ஏ.ராஜேந்திரன்
`ஹலோ! உங்களுடைய செல்போனில் இருப்பது BSNL சிம்கார்டா? அப்ப டவர் கிடைக்காது, சிக்னல் கிடைக்காது. உடனே தனியார் சிம் கார்டுக்கு மாறுங்கள், என வெறித்தனமான விஷம பிரச்சாரம் பொதுத்துறை நிறுவனமான BSNL மீது திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
உளவியல் ரீதியாகவே BSNL சரியில்லை என்று நினைக்க வைக்க அத்தனை சாகசங்களையும் செய்கிறார்கள். ஆனால், கிராமங்களுக்கு நாம் சென்றால் தனியார் செல் போன்களை மூடி வைத்துவிட வேண்டியதுதான். செல்போன் வெறும் விளையாட்டுப் பொம்மையாக மாறிவிடுவதை வசதியாக மறைக்கிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் செல்போன் `சேவை' துவங்கி 7வருடம் கழித்துதான் BSNL அதன் சேவையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட அனுபவமும், தொழில்நுட்பத் திறனும் கொண்ட BSNL ஆலமரத்தின் வேர்கள் போன்று கிராமப்புறம் வரை விரிந்து படர்ந்து பிரமாண்டத் துறையாக எழுந்து நிற்கிறது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் BSNL கட்டமைப்பை பயன்படுத்தித்தான் செல்போன் சேவைகளை வழங்கி வருகின்றனர் என்பது முக்கியமான ஒன்று. இதற்குமுன் ரூ. 25,000-க்கு செல்போன் விற்றதும், ஒரு காலுக்கு ரூ. 16-வரை வசூலித்தும் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்த அனுபவம் நமக்குத் தெரியும். ஒரு கட்டத்தில் அவர்களே ரூ.500-க்கு இரண்டு செல்போன்கள் கொடுத்த கேலிக்கூத்தும் நடந்தது.
மார்ச் 2007 வரை மாதத்திற்கு 15 லட்சம் முதல் 20லட்சம் இணைப்புகள் வழங்கி, செல்போன் சிம்கார்டு கிடைக்கவில்லை என்ற அளவுக்கு வளர்ந்தது. இணைப்புகள் வழங்குவதற்கான கருவிகள் இல்லாமையால் BSNL தவிக்கிறது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் டெண்டர் விட்டது. அதை இறுதி செய்து கருவிகளை வாங்குவதற்கான ஆர்டர்களைக் கொடுக்க ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலை, தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றன. நகரப் பகுதிகளில் உள்ள இணைப்புகளை தங்களது ஆக்கிரமிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதில் வேகம் காட்டுகின்றன.
இப்போது ஏர்டெல் 4.07 கோடி, ரிலையன்ஸ், 3.05 கோடி , ஹட்ச்: 2.92 கோடி க்ஷளுசூடு 2.79 கோடி என்ற அளவில் செல்போன் இணைப்புகளை இயக்குகின்றனர். வழக்கமான வேகத்தில் BSNL செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இது தனியார் நிறுவனங்கள் வளர்வதற்கு முழுமையாக கதவைத் திறந்துவைத்தது போல் இருக்கிறது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (FRAI) தனியார் நிறுவனங்களை முழுமையாக ஆதரித்து நிற்கிறது.
மத்திய அரசு TRAI மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் முற்றுகையிலிருந்து விடுவித்துக் கொண்டுதான் BSNL செயல்பட வேண்டியிருக்கிறது.
BSNL தேவையை நிறைவேற்ற 6 கோடி இணைப்புக்கள் வாங்கப்படும் என முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் 2005ல் அறிவித்தார். ஆனால், அது வேகம் பெறவில்லை. மார்ச் 2006ல் 4.55 கோடி இணைப்புகளுக்கு மட்டும் உலக டெண்டர் விடப்பட்டது. 5 பன்னாட்டு கம்பெனிகள் பங்கேற்றன. எரிக்சன் மற்றும் நோக்கியா கம்பெனிகள் தேர்வு செய்யப்பட்டன. 3 கம்பெனிகளின் டெண்டர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதில் ஒன்றுதான் மோட்டரோலோ நிறுவனம். இவர்களுக்கு வக்காலத்து வாங்கி அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு அமைச்சகத்துடன் காரசாரமாக வாதம் புரிந்துள்ளார். அமைச்சர்களை மாற்றுவது முதல் அணுசக்தி பிரச்சனைவரை அமெரிக்காவின் தலையீடும், அத்துமீறலும் அதிகரித்து வருகிறது.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் பதவியிழந்தார் தயாநிதிமாறன். அந்த இடத்திற்கு ஆ. ராசா வந்துள்ளார். வந்தவுடன் ஏற்கனவே டெண்டர் விட்டது சரியல்ல. அதிக விலைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 10000/- கோடி நஷ்டத்தை மாறன் உருவாக்கி விட்டார். எனவே புது டெண்டர் விட வேண்டும் என அறிவித்தார். உட்கட்சிப் பிரச்சினை வழியாக மாறனை தாக்குவதும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வளர்ப்பதும் ஒரு சேர அமுலாக்கப்படுகிறது.
மீண்டும் டெண்டர் விடுவதால், காலதாமதம் மட்டுமல்ல, ரூ. 30,000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று BSNL ல் உள்ள அனைத்து சங்கங்களும் கருத்து தெரிவித்தன. உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் ஒன்றுபட்டு அரசின் முயற்சியை எதிர்த்தும், உடனடியாக 4.55 கோடி இணைப்புகளை வாங்குவதற்காக ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு ஆர்டர் கொடுத்து BSNL செல்போன் சேவையை முதலிடத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் ஜுலை 11ந்தேதி மகத்தான வேலைநிறுத்தம் நடத்தினர். BSNL வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இது. அனைத்து BSNL அலுவலகங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கைக்காக நடைபெற்ற வேலைநிறுத்தம் இது. அரசாங்கம் ஆடிப்போய்விட்டது.
இப்போது 7.5 கோடி இணைப்புகள் வாங்குவோம். முதலில் 2.25 கோடி இணைப்புகள் வாங்கப்படும். இறுதி செய்யப்பட்ட டெண்டர் அமுல்படுத்தப்படும். என்று அமைச்சர் ஆ. ராசா அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்து. தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடனடியாக G2, G3 கருவிகள் வாங்க உறுதி அளித்ததால் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளன.
சம்பளம், போனஸ் என்று மட்டும்தான் ஊழியர்கள் போராடுவார்கள் என்ற பொய் பிரச்சாரத்தை முறியடித்து, பொதுத்துறை தலைநிமிர்ந்து நிற்கவும், வளரவும், விரிவடையவும், குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கவும் வலியுறுத்தி ஒன்றுபட்டுப் போராடுவார்கள் பொதுத்துறை ஊழியர்கள் என்பதை ஜூலை 11 வேலைநிறுத்தத்தால் நிரூபித்துள்ளனர் BSNL ஊழியர்கள்.
துணிச்சலாக முதல் குரல் கொடுத்து, மற்ற சங்கங்களையும் போராட்டக்களத்தில் இறக்கியதில் BSNLEU சங்கத்தின் பாத்திரம் பாராட்டுக்குரியது. ஜூன் 3ம் வாரத்தில் தங்களது ஊதிய உயர்வு பிரச்சினையில் BPE (Bureau of Public Enterprises) குறுக்கீடு செய்வதற்கு எதிராக BSNLEU நடத்திய ஆர்ப்பாட்டங்கள் / தர்ணா போராட்டங்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் ஈடுபட்டிருந்தனர். துறையைப் பாதுகாக்கும் கோஷத்தை அதில் மையப்படுத்தியிருந்தனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|