எங்கள் ஊர் சிவன் கோயில் லலிதானந்த்
சுவரோரம்
சிறுநீர் கழிப்பதைத்
தடுக்க
தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராமல்
பதினெட்டாவது
தென்னங்கன்றை நடுகிறார்
தலையாரி சுப்ரமணி
சிதிலமடைந்த
மடப்பள்ளிக்குள்
பசித்த எறும்புகளும்
கொழுத்த எலிகளும்
குடியிருக்கின்றன
குதிரை வாகனத்தின்
குறியை அசைத்து
சிரிக்கும் சிறுவர்கள்
செவ்வரளிச் செடிகளின்
நிழல் மறைவில்
திருட்டுப் புகையூதும்
இளவட்டங்கள்
பாத்திரங்களில் விழுந்த
துளை அடைக்கும் பொருட்டு
சிலைகளின்
எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட
அபூர்வமாய் வரும் பெண்கள்
எதிர்க்கடையிலிருந்து
தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து
நந்திக்குப் பின்புறம்
வட்டமிட்டு சீட்டாடும்
ஆண்கள் என
எப்போதும்
ஆள் நடமாட்டமுள்ள
எங்கள் ஊர்
சிவன் கோயிலில்
இப்போதும்
மறக்க முடியாதது
என்னவெனில்...
பிரதோஷம் தோறும்
பிரசாதமாக
குருக்கள் தரும் சுண்டலை
எல்லோரும்
அங்கேயே தின்று முடித்து
கால் சட்டையில்
கை துடைத்துக் கொள்ள
மாப்பிள்ளை பென்ச்சு
முருகேசன் மட்டும்
பத்திரமாக வீட்டுக்கு
எடுத்துப் போவான்
அப்பா அருந்தும்
சாராயத்திற்கு
தொட்டுக் கொள்ளவென
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|