அறிவுச் சுரண்டல்
சீ. விக்கிரமன்
பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர் சுரண்டல்!
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சுகின்றோர்
உலகினிலே கொழுக்கின்றி சுரண்டல்காரர்!
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்காதார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போருக்கு?
உழைக்கின்ற மக்களெலாம் சிந்திக்கின்ற
உழைப்பேற்காக் காரணத்தால் தொடரும் துன்பம்!
விளம்பரத்தின் பகட்டாலே கண்ணா டிக்கல்
வைரமெனல் வணிகத்தில் சுரண்டல்! சற்றும்
நலப்பணியில் நோக்கமிலார் தொடங்கம் தொண்டு
நனிமிக்க ஏமாற்று சுரண்டல்! இன்றும்
துலக்கிமிலாப் பழங்கதையும் தொன்மக் கூற்றும்
சொல்லகின்ற அருள்வாக்கும் பலியும் நாமும்
விலக்காத மருதரும வெட்க்க் கேடும்
உண்மையில்நம் அறிவேய்க்கும் பெருஞ் சுரண்டல்!
அன்புணர்வு மாந்தநேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோலத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவருக்கும்
நேரமில்லை; காலமில்லை; விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வை சிந்திப்பீரே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|