சூர்யோதயா கவிதைகள்
பாடல் பெற்ற ஸ்தலம்
அடியார்களின் பாடல்கேட்டு
அடைத்துக்கிடந்த கதவுகளையும்
திறந்திருக்கிறான் ஆண்டவன்.
பூட்டிக்கிடந்த கதவுகளுக்குள்
மூச்சுமுட்டப் புழுங்கிக் கிடந்த
ஆண்டவனுக்கு
எளிதாகிப்போனது சுவாசம்
அனுபவப்பால் அருந்தியவருக்கும்
அத்துணை எளிதில் கிடைக்காத தரிசனம்
குளக்கரையில் உமைப்பால் உண்டவருக்கு
உடனே கிடைத்தது
பிள்ளைக்கறி கேட்ட வன்நெஞ்சமும்
ஊடல் தீர்க்க பரவையாரிடம்
நடையாய் நடந்த மென்நெஞ்சமும்
ஒருசேர வாய்த்திருக்கிறது.
ஆண்டவனுக்கு
எத்தனையோ கோவில்கள்
பிரகாரங்கள்
பரிவாரங்கள் சூழ்ந்த கட்டுக்கள்
பயபக்தியோடு அருள்வேட்டல்கள்
அத்தனையும் விடுத்து
ஏதோவோர் குளக்கரையில்
மரத்தடியில் கதவுகளுக்குள்ளான
கன்னிமூலையில்
காட்சி கொடுத்துக் கவர்ந்துவிடுகிறான்
உள்ளம் கவர் கள்வனாய்
அடியவனைத் தன்வயமாக்கிப்
பாடவைத்ததால் அவன் உறைவிடமும்
இடம்பெற்றுவிடுகிறது இலக்கியத்தில்
பாடல் பெற்ற ஸ்தலமாய்!
ஆடுகளம்
குத்திக் கிழிக்கும் கூரியவாள்
விட்டெறிந்தால் எட்டுத்திக்கும் சென்று
தலைகொய்யும் வேல்
தொண்டைமானின் படைக்கலக்கொட்டிலில்
தேர்ந்து கொண்டுவந்த அம்புக்கட்டு
சினத்தீ மறவர்
நடைநவில் புரவி
மதில் தகர்க்கும் மதர்ந்த யானை
பட்டொளி வீசும் பதாகை தாங்கியதேர்.
வீரக்கழல் மார்புக்கவசம் கேடயம்
தேர்த்தட்டில் வீரம்.
எதிராளியைக் குப்புறத்தள்ளி
எழுந்திருக்கவிடாத வேகம்
எவர்வரினும் புறம்கொடாத தன்மானவுணர்வு
எதுவும் செய்யமுடியுமா என்னை
இறுமாப்போடு நெஞ்சம் நிறை கனல்
பயனற்றுப் போகிறது
அத்தனையும் நம் ஆடுகளத்தில்
மொத்தமாய் இழந்துநிற்கிறேன்
நிராயுதபாணியாய்
கத்தியின்றி இரத்தமின்றி
வெற்றிகொண்ட இறுமாப்பில்
கர்வத்தோடு கேட்கிறது சிரிப்பொலி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|