மரணிக்கத் தொடங்கும் இலைகள்
கன்னிக்கோவில் இராஜா
இலையுதிர் காலத்தின் ஒரு பொழுதில்
நீண்ட சாலையின் மரங்களில்
உதிர ஆயத்தமாகின இலைகள்!
வழிப்போக்கர்களின் கண்களில்
அக்காட்சி பெரும் மாற்றத்தை ஏதும்
நிகழாவண்ணமே
நிகழ்ந்து கொண்டிருந்தது!
தாயோடு சாலையில் நடக்கும்
சிறுமியின் சோகப்பார்வையில்
தொற்றிக் கொண்டிருக்கிறது
இலைகளின் மரணம்!
தேம்பி தேம்பி அழும்
சிறுமியின் கண்ணீரை
போக்க வழியின்றி
தவித்திருந்த தாயின்
கவலையைப் போக்க
மரணமுற்ற இலைகளின்
பக்கவாட்டில் மீண்டும்
முளைக்கத் தொடங்கின தளிர்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|