கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்
பெருநகரக் குறிப்புகள்
பழைய தங்க நகைகளை எடை எழுதி
உருக்கி விற்பவனின் எழுதுகோல் எழுத மறுக்கிறது
ஆண்களுக்கான உள்ளாடை விற்பனை பிரிவில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி
தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று
கைத் தொலைபேசியில் பேசியபடி
கூட்டத்தில் தொலையக்கூடாது என்று உறையிட்டு
மூடிவைத்த பொம்மையின் கண்ணீர் பெருகி
நனைக்கிறது கால்களை
முழுவதும் கணிணி மயமாக்கப்பட்ட வங்கி
ஒன்றின் மூடிய கதவுகளுக்கு முன்னே இவள்
கல்யாணச் சீருக்கு பாய் விற்கிறாள்
இன்று வறுபட்ட கடலையின் மேல்தோல்
நேற்று பெய்த மழை நீரில் மிதக்கிறது
எப்போதும் இரவு எட்டரை மணிக்கே நடை சாத்தும்
பழக்கமுள்ள கோயிலின் உண்டியல்
கனவில் உடைபடும் அபாயத்துடன் நிற்கிறது.
இன்று நீ பார்த்த நதி
மழைக்குப் பிந்தியநாளின் வெப்பத்தைப் போல
கடு சூட்டுடன் தேநீர் கையில் இருக்கிறது.
வளர்ப்புத் தந்தையின் மறைவுக்கென்று,
மழை அழிவுக்கென்றும் தனித்தனியாக
துக்கம் கேட்க போக முடியுமா தெரியவில்லை
மீதமிருக்கும் ஆற்றின் நீர்
போக முயற்சிக்கவில்லை வேறெங்கும்
மக்கள் பொருட்காட்சி மீதுள்ள ஆர்வம் மறந்து
பார்க்க வருகிறார்கள் சீரழிந்த நதியை
குடிப்பதற்கு முன்பிருந்தே
மெல்ல நதி நீரை ஒத்ததாயிருக்கின்றன உன் கண்கள்
எனக்குப் பழகின கூண்டுக்குள்
சென்று அமர்கிறேன், நீயும் திரும்பிக்
கொண்டிருக்கிறாய்
கூடற்ற ஒரு கூட்டுக்கு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|