காலைப் பறவைகளின் கலந்திசை அன்பாதவன்
தமிழ் ஹைகூக்கள் இன்றளவும் விவாதங்களை உருவாக்குபவையாகவே உள்ளன. ஜப்பானிய ஹைகூக்களுக்குள், ஒரு காட்சியை காண்பித்து அதனுள் ஜென் பவுத்தத்தின் ஏதேனுமொரு அம்சம் பூடகமாய் வைத்து சொல்லப்படும்.
‘தமிழிலோ ஹைகூ கவிதைகளில் குறியீடுகள், படிமங்கள், கேள்விக்குறிகள், வியப்புக் குறிகள், உவமை, உருவகம், விடுகதை, புதிர்ப்பாணி என வேறு வேறு உத்திகள் உள்ளடங்கியுள்ளதை இரா.தமிழரசியின் ஆய்வு நூலான ஹைக்கூவில் சமூகமும் உத்திகளும் உறுதி செய்கிறது.
அந்த வகையில் தன் பயணத்தில் தான் பார்த்த, தன்னை ஈர்த்த எவை குறித்தும் ஹைக்கூக்களில் பதிவு செய்து ‘மௌனம் பேசும்' என்ற தொகுப்பாக்கித் தந்திருக்கிறார். எஸ். விஜயன்
‘பரந்த உலகில் விரிந்த மனதுடன் உலவும் சில மனிதர்களுக்கு' தன் நூலை சமர்ப்பணம் செய்திருக்கும் விஜயனின் ஹைகூக்கள் சமூக நோக்கோடு நெய்யப்பட்டவை. இயற்கையை நேசிப்பவை; மனித பாடுபவை
மனித மனங்களின் அடங்காத ஆசையை ரத்தினச் சுருக்கமாய் சொல்வதிது :
‘எத்தனையோக் காடுகளில்
அலைந்து திரிந்தும்
அகப்படவில்லை போதி மரம் '
போகிற போக்கில், இதுகாறும் புனிதங்கள் என கற்பிக்கப் பட்டவைகளின் மீது ‘சொத்'தென வீழ்கிறது விஜயனின் விமர்சனம்.
"முனிவரின் தவம் கலைந்தது
பறவைக்கே வெற்றி
எச்சம் .... !
அதீத பக்தியில் கண்ணைக் கொடுத்தது, பிள்ளைக் கறி சமைத்தது ஒருவகை. இன்றோ கடவுள்களின் பிரதிமைகளை சிதைப்பது மதவெறியாய் பரவிவரும் ஆன்மீக அரசியல்.
‘கடலில் கரையப் போகின்றது
காப்பாற்ற யார் வருவார்
மௌனமாய் பிள்ளையார் ''
உண்மையில் இந்த ஹைகூ பல்வேறு அர்த்த செதில்களைக் கொண்டது. எதை யாரைக் காப்பாற்ற வேண்டும்...? _ பிள்ளையாரையா... வேதியியல் கழிவுகளால் வீணாகப் போகும் கடல்நீரையா, கடல்வாழ் உயிரினங்களையா, கடலோடு தம் வாழ்வை இணைத்துக் கொண்ட மீனவக் குடுபங்களையா, கடல் சார்ந்து வசிக்கும் சராசரி மனிதர்களையா..........
ஒரு செயல் இன்னொரு செயலுக்கு காரணமாகிறது. விஜயன், உயர்திணைகளின் பிரச்னைகளுக்காக அஃறிணைகளிடமும் இரைஞ்சுகிறார்.
‘பாபாட்டியின்
பசி அடங்க
பாம்பே படமெடு !
தீர்ப்புகள், தண்டனைகள் குறித்து மறுவிசாரனை வேண்டுகிறது ஒரு ஹைகூ
‘மனம் திருந்தினான் கைதி
என்ன பயன் ?
தூக்கு தண்டனை.... ! ''
எவ்வளவு நாட்களுக்குத் தான் பழங்கதைகள் பேசி திரிய முடியும் ! தலைமுறை மாறும்போது எழுகின்றன புதிய சிந்தனைகளும், புதுப்புதுக் கேள்விகளும்.
‘சோறு ஊட்டினாள்
அடம் பிடித்தது குழந்தை
பழைய நிலா''
மனிதம் குறித்து இத்தனை அக்கறைக் கொண்டிருப்பினும் தானறியாமல் தலை தூக்குகிறது விஜயனின் ஆண்மய்யப் பார்வையும், சாதிய மனோபாவமும்.
‘புகைவண்டியில்
உருவாகியது சிநேகிதம்
கரி பூசுவானா?
ஆண்கள் ஏமாற்றி கை விடுவது தான் பெரும்பாலும் என்பதை அறிவோம் நாம். பெண்களை மட்டுமே குற்றஞ் சாட்டுவதும் குறைசொல்வதும் எந்தவகை நீதி.
90'களில் எழுந்த ‘தலித் எழுச்சிப் பேரலைக்குப் பின் தலித் வாழ்வியலின் வழக்கமான வார்த்தைகளான பறையன், பள்ளன், சக்கிலியன், வெட்டியான், தோட்டி போன்றவை வழக்கொழிந்து வீரமும், விஞ்ஞானமும், சமூகவியல் பார்வையும் கொண்ட புதிய சொல்லாடல்கள் பயன்படுத்தப் படுகின்றன. ‘வெட்டியான்' என்ற சொல் இன்றைக்கு ‘மயானத் தொழிலாளி'யாக மாறிவிட்டது (வாழ்நிலை மாறவில்லை என்பது தனி விஷயம்) எனவே விஜயனைப் போன்ற மனிதம் நிரம்பிய கவிஞர்கள் சமூகவியல் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு படைப்புகள் உருவாக்குவது நல்லது.
பக்கம் 52ல் வெளியான ஹைகூ பக்கம் 80-திலும் பதிவாகியிருப்பதை நூலாக்கத்தினர் கவனித்து எதிர்வரும் பதிப்புகளில் திருத்திக்கொள்ள வேண்டும்.
சில Statement களை, புதிர்களை, ஹைகூக்களென நம்பும் போக்கை கவிஞர் கை விடுவாரேயானால் வளமான கவியெதிர்காலம் காத்திருக்கிறது.
காலைப் பறவைகளின் கலந்திசையாக ஒலிக்கும் ‘மௌனம் பேசும்' வாசக மனங்களில் கூடு கட்டிக் கொள்ளும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|