மும்பையின் துயரம் அன்பாதவன்
கன்னங்கரேலென்று கழிவுகள் கலக்க
மெல்ல நடந்தோடும் கறுப்போடையாய்
மித்தி
மாநகரத்தின் மையத்திலிருந்து
சிறு ஊற்றாய் தொடங்கும் நதி
மிதக்கும் அதூய்மைகளின் பெருங்கூடையானது
சூழலின் துரதிர்ஷ்டமா...
குப்பை மனிதர்களின் கொடையா...
நீல ‘அரபி’யின் வெண்ணலைகள்
கருநீல அழுக்காய் திரள்வது
மித்தியின் கைகுலுக்கலினாலா...
வாகனப் புகையோடு தொழிற்சாலைக் கசடுகளும்
கலந்த காற்றில்
மித்தியின் முகத்தில்
பொங்கும் துயரக் கொப்புளங்கள்
உயிர்கள் வாழ வழியில்லா ஆற்றுப் படுகைகளில்
கூடுகட்டிக் குடும்பம் நடத்தும்
பெயரறியாக் கிருமிகள்
என்றோ ஒருநாள்
கூழாங்கற்களின் ஒளி மின்ன
வண்டலின் நுண்மணல்களிடையே
இசைபெருக்கியவள் தான் நீ
வறிய மூதாட்டியைப் போல
நெகிழிக் கழிவுகளால் நீர் முகம் மறைத்து
காத்திருக்கிறாய் மரணம் பார்த்து
பயனற்ற குவியல்களின் சாக்கடையாய் இன்று
புனிதப் பூக்குப்பைகளை உன்னுள் வீசும்
மனிதர்கள் மாறும் நாளில்
ஜனித்து சிரிக்கக் கூடும் புதிய சிசுவாய்
மும்பையின் ப்ரிய நதி
மித்தி
- அன்பாதவன், மும்பை (jpashivammumbai@rediffmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|