விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
கவிதை என்பது...
கவிதை என்பது
வாழ்வை மறுதலிப்பது (போல்)
வாழ்வு என்பது
கவிதையை மறுதலிப்பது (புரைய)
வாழ்வில் கவிதைத்
தருணங்கள் உண்டு - ஆனால்
கவிதையிருக்க வாய்ப்பில்லை
கவிதையில் வாழ்வின் - சாரமுண்டு
அதில் இருப்பது வாழ்வல்ல (ஒப்ப)
(உதாரணத்திற்கு)
பெருங்கவிஞர்கள் எல்லாம்
வாழ்வைவிட்டு விலகி ஓடி
குடித்துக் கொண்டும்
பரிசில்கள் வாங்கிக்கொண்டும்
பிள்ளைகளை பயமுறுத்திக்கொண்டும்
வாழ்ந்துக்கொண்டே இருப்பார்கள்
எழுதுவார்கள்
எல்லாமே கவிதையாகத்தாம் இருக்கும்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு
கவிதை என்ற சொல்லே
அநேகமாய் பரிச்சயமிராது
(பாட்டுக்கட்டுவது என்றுதான் சொல்கிறார்கள்)
நல்லபாடல்களை அனுதினமும்
இரவில் கேட்டுக்கொண்டு
இருக்கிறார்கள் பகலிலுங்கூட
வேலைக்குப் போவதற்கு முன்
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
இப்படித்தான்
கம்பதாசன் மருதகாசி
பட்டுக்கோட்டையார்
கண்ணதாசன்
கங்கைஅமரன் வைரமுத்து
நா. முத்துக்குமார்
எல்லோருமே
பிரபலக் கவிஞர்களானது
இவர்களெல்லாம்
எழுதியவை கவிதைகளா
இல்லவே இல்லை
திரைப்படப்பாடல்களே தமிழ்க்கவிதையென
மயங்கும் அளவிற்கு
கெடுத்து வைத்தது எது
வரலாறு ஒருபோதும்
நேர்கோட்டில் இயங்குவதில்லை
இது ஒரு விதி
வளையும் நெளியும்
குழம்பும் - பிறகு
தெளியும்
மழையில்லாதபோது
வறண்டிருக்கும்
சமயங்களில்
தேங்கியிருக்கும்
ஆனால்
எப்போதும்
நதிதான் அது
(நதி என்பது
ஆசீர்வதிக்கப்பட்டது)
நதி மனிதர்களையே
பிரதிபலிப்பது
வெகு மக்களுக்கு
ஏன் கவிதை தெரியவேண்டும்
எந்தக் காலத்தில்
பாமரஜனங்கள்
கவிதை வாசித்தார்கள்
மறுபடியும் மறுபடியும்
சொல்லவேண்டியதாக இருக்கிறது
அவர்கள்
அன்றாட வாழ்க்கைக்கே
அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்
அமர் பார்த்திருக்கிறான்
அரைஞாண்கயிறு
விற்றுக் கொண்டிருப்பவனை
வளையல் விற்பவனை
பாச்சா உருண்டை
விற்று வாழ்பவனை
காலில் செருப்பில்லாமல்
குழந்தைகளுக்காக
ஜவ்வுமிட்டாய் விற்பவனை
தியாகராயநகர் பேருந்து நிலையத்தில்
பஸ் ஏறி
பாக்கெட் டைரி விற்பவனை
இன்னும் இன்னும்
எவ்வளவோ பேரை
இவர்களுக்கு கவிதை படிக்க
எங்கே நேரமிருக்கும்
அல்லது இவர்கள் ஏன்
கவிதை படிக்க வேண்டும்
அவர்கள் மண்டையில்
என்ன ஓடிக்கொண்டிருக்கிறது
மகனைப் படிக்கவைப்பது
மகளைக் கட்டிக்கொடுப்பது
இவைபோன்ற
எளிய ஆசைகள்தாம்
கவிதை எழுதுகிறவன்
வாழ்விலிருந்தே
வாழ்வை மறுதலிக்கிறான்
(என்றுதான் தோன்றுகிறது)
எங்கே இவனூர்
பிரதான சாலையிலிருந்து
கிளைபிரிகின்றன தெருக்கள்
எது
இவன் தெரு
யாரிடம்
விசாரிக்க
எப்படி
போக
வழியோரம் மறிக்கிறது
ஒரு தென்னந்தோப்பு
சற்றே தள்ளி
சிற்றோடை ஒன்று
இளைப்பாறிய பிறகாவது
போய் சேரவேண்டும்
எங்கே
இவனூர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|