இயைபு நகைத் துளிப்பா புதுவை தமிழ்நெஞ்சன்
காலங்கள் விரைந்து கடந்து கொண்டிருப்பது போல, கலைகளின் வடிவங்களும் காலங்களின் சூழலுக்கேற்ப நிலைபடுத்திக் கொள்ளவும், தன் இருப்பை உறுதிப்படுத்தவும் முயன்று வெற்றி அடைந்து வருகின்றன. அதனின் ஒரு கூறே இந்த நிப்பானிய ஐக்கூ தமிழில் துளிப்பாவாய் நம் முன் மூவடியான பாவடியால் தமிழ் நிலத்தில் தன் காலடிச் சுவட்டைப் பதித்திக்கிறது.
தமிழ்நிலம் உலகில் குளிர்ந்த முதல் நிலம் என்பதாலும் அமமண்ணில் எந்த விதையும் விரைந்து தன் விதை உறக்கத்தை கலைத்து விழித்தெழுந்து நம்மை வியப்படைய செய்துவிடும் என்பது இந்த துளிப்பா மூலம் அறியலாம். நிப்பானிய ஐக்கூகளுக்கான மரபுகள் அனைத்தையும் தமிழ்த் துளிப்பாக்கள் கடைபிடிக்கவில்லை என்றாலும் தமிழ் மரபு சார்ந்த வடிவத்திற்கேற்ப சிலவற்றை ஏற்றும் பலவற்றை தவிர்த்தும் இன்று செழுமையாக வளர்ந்திருக்கிறது.
ஐக்கூ என்ற பெயரில் புற்றீசல்கள் போல நிறைய வந்து கொண்டிருந்தாலும் ஈசலின் வாழ்வைப் போலவே அவைகள் மடிந்து விடும். டார்வின் கோட்பாடு சொல்வது போல ‘வலிமை வாய்ந்தது நிலைக்கும்'. அது இந்த கலை வடிவங்களுக்கும் பொருந்தும். சென்காய் என்ற சென் ஆசிரியரின் சிந்தனை ஒன்று நினைவிற்கு வருகிறது. அக்கதையில் வரும் செல்வரைப் போலவே நிறையத் துளிப்பா எழுதுபவர்கள் துளிப்பாவைப் புரிந்து கொண்டு எழுதுகின்றனர்.
"எங்களது தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் மகிழ்ச்சியாகவும், செல்வச் செழிப்பாகவும் இருக்க ஏதாவது எழுதிக் கொடுங்கள்'' என்றார் ஒரு செல்வந்தர் சென் ஆசிரியர் சென்காய் என்பவரிடம்.
‘அப்பா இறக்க, மகன் இறக்க, பெயரன் இறக்க' என்று தாளில் எழுதிக் கொடுத்தார் சென்காய்.
செல்வந்தர் சினவயப்பட்டு "என் குடும்பம்'' மகிழ்ச்சியாக வாழ உங்களிடம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் இப்படி எல்லோரும் சாக வேண்டும் என்று எழுதுகிறீர்களே இது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? என்றார்.
சென்காய் அறிவாழமோடு அமைதியாக தான் எழுதியதின் உட்பொருளை தெளிவாக விளக்கினார். "உங்களுக்கு முன் மகன் இறந்தால் அது உங்களுக்குத் துன்பம், அதுபோல உங்களது பெயரன் இறந்தால் அது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் துன்பம். உங்களது குடும்பம் தலைமுறை தலைமுறையாக நான் குறிப்பிட்ட வரிசைப்படி நடந்தால்தான் அது இயற்கையாக வாழ்க்கை முறையாக அமையும். இதைத்தான் மெய்யான வளம், நலம் என்கிறேன்'' என்றார்.
சென்காய் சொன்னது போலத்தான் இந்த சென் மரபு சார்ந்த இந்த துளிப்பா வகையை நாம் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும். மேலோட்டமாக பொருள் கொண்டால் விளங்குவதும் தவறுதலாகக் கூடபடும். அதனின் மெய்யான உட்பொருளை அறிந்தால் தான் பேரின்பம் கிட்டும்.
ஐக்கூ - துளிப்பா
சென்ரியூ - நகைத் துளிப்பா
லிமரைக்கூ - இயைபுத் துளிப்பா
ஐபுன் - உரைத் துளிப்பா
ஐக்கா - ஓவியத் துளிப்பா
என்ற வகையோடு முடிந்து விடாமல் புதிய முயற்சியாய் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தமிழ் நெஞ்சில் ஏற்பட்ட உந்துதலால், ஊக்கத்தால் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற ஆக்க உணர்வால் லிமரைக்கூவையும் சென்ரியூவையும் கலந்து லிமரிசென்ரியூ என்கிற புதிய வடிவை உருவாக்கி கரந்தடி இதழில் செப்டம்பர் 2004 இல் 20 இயைபு நகைத் துளிப்பாக்களை சோதனை முயற்சியாக பதிவு செய்தேன்.
சிறுத்தைப் புலி போல கலப்பினத்திற்கு எப்போதும் வீரியம் அதிகமிருக்கும் என்பார்கள் அது உண்மைதான். இயைபு துளிப்பா வடிவில் நகைச்சுவை கலந்தால் இயைபு நகைத் துளிப்பா என்கிற இன்னொரு வடிவம் தமிழிற்கு கிடைத்துள்ளது. மேற்கண்ட ஐவகையிலே நூற்கள் வந்து கொண்டு இருந்தாலும் ஆறாவது வகையாய் இந்த இயைபு நகைத் துளிப்பாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
துளிப்பா வரலாற்றில் இந்த முயற்சி கட்டாயம் தனக்குரிய இடத்தைப் பெறும் என்ற வகையில் எனது இயைபு துளிப்பா சில :
* அரசியலில் காணும் அறிமுகம்
அகத்தில் தூய்மை சிறிதும் இல்லாது
அழிவைத் தந்திடும் நரிமுகம்.
* தண்டத்தின் கையிலொரு தண்டம்
தீண்டாமை ஷேமகரமானது என்கிறதந்த
காமகே(õ)டி முண்டம்.
* பொய்முகம் காட்டும் மேடை
அரசியல்காரர்களை அடித்து போட்டு
தூக்கவேண்டும் பாடை...
* நானே உலகின் ஒளி
நற்செய்தி கூட்டத்தில் மின் தடை
இருளில் நால்வர் பலி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|