மக்கள் மழிப்பகம் - த. பழமலய்
அந்தரங்கம் புனிதமானதாக இருக்கலாம்.
அடிமயிர் அப்படி அன்று.
அகற்றப்பட வேண்டியது.
கண்பார்வை குறைந்தவர்களுக்கு,
கண்ணாடிப் பார்வை குறைந்தவர்களுக்கு
இதில்
"தன் கையே தனக்கு உதவி” என்பது,
இரத்தக் களரியில் முடியலாம்.
"ஆட்டமுடியாது; அசைக்க முடியாது” என்று
சவால் விடுபவர்களைப் பற்றி
நாம் இங்குப் பேச வேண்டாம்.
அதான், ஆட்ட முடியாதே! அசைக்க முடியாதே!
இல்லை, புல்டோசர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
"நசநச” என்று உணர்பவர்களைப் பற்றித்தான்..
பசைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சிலருக்கு ஒத்துக் கொள்வது இல்லை,
அதுவும் மகளிருக்குதானாம்.
பண்டைக்கால முறையில், இன்னொருவர்
பங்கேற்பு இருக்கிறது. பரிகாசம் செய்வார்!
"தன் – துப்புரவு” ஒரு மருத்துவந்தான்.
அதை மருத்துவர் செய்வதுதான் சரி
கை மருந்துதான் ஒரு களரியில் முடிவதாயிற்றே!
முடிதிருத்தும் நிலையங்கள் இருக்கின்றன.
அடி திருத்தும் நிலையங்கள் இல்லை.
அழகு நிலையங்களில் வெறும்
சிங்காரம், அலங்காரந்தான்.
கைகளைத் தூக்கிக் காண்பிப்பதற்கே
"மழிப்பவரின் சுயமரியாதை” பேசுகிறார்
ஒரு ஆசிரியர் - கவிஞர்.
(நகர்க் குருவி, இரத்தின புகழேந்தி)
பழக்கமான நாவிதரிடம் பக்குவமாகக் கேட்டேன்
"ஆவி அடிச்சி ஆயுளே கொறஞ்சிடுமாம்!''
என்னதான் செய்வது நான் / நாம்?
குழுமூர் நொண்டிப் பரிகாரி செய்வார்.
சுத்தமாகச் செய்வார் - என்று
சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள்.
கலியாணத்தின் போது
காசை மட்டும் கொடுத்துவிட்டேன்.
வேட்டிக்கும் சேர்த்துதான்.
அவர் அருமை தெரிகிறது இப்போது.
"இது ஒரு பிரச்சனையா!''
என்று கேட்கலாம் ஓர் இளைஞர்.
எனக்குப் போல் வயதாகட்டும்!
அப்போது வந்துவிட்டிருக்கலாம்
மழிப்பகங்கள், மர இழைப்பகங்கள் போல
"மழித்தலும் வேண்டா'' என்று
வள்ளுவர் சொன்ன நாட்டில்தான்
புடுங்கிக் கொள்ளச் சொல்கிறாரா?
இல்ல, அது துறவிகளுக்குச் சொன்னது!
இல்வாழ்வான் / இல்வாழ்வாள் பற்றித்தான்
என் கவலை / கரிசனம் எல்லாம்
மருத்துவன் தாமோதரனார் (சங்கப் புலவர்)
வாழ்த்துகளோடு,
(எல்லாம் சொல்லும் கவிஞர் பழமலய்)
நானே தொடங்கலாம்
வேலை ஆள் கிடைப்பாரா?
நானே தொடங்கி நானே செய்யவும் தயார்.
கை நடுக்கம், கண்பார்வைக் குறைவு
வாடிக்கையாளர் முன்வந்தால் சரி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|