உலக கவிஞர்கள் வரிசை - சார்லஸ் புகோவஸ்கி (1920-1994)
புகோவஸ்கி 1920ல் பிறந்தார். மிக இளம் வயதிலேயே எழுதத் துவங்கிய இவரது கவிதைகள் 1940ல் தொகுப்பாய் வெளிவந்ததுள்ளது. புகோவஸ்கி மிக கஷ்டமான சூழ்நிலையில் வேலையின் காரணமாக எழுத்துப் பணியை விட்டு விட்டார். எப்பொழுதும் ‘பார்களில்' காணப்பட்டார். கிடைக்கும் சிறிய தொகையையும் குடிக்கவே செலவிட்டார். எழுதுவதில்லை, வெளியிடுவதில்லை இப்படியாக இருபது ஆண்டுகளை கழித்து விட்டார். இருபது ஆண்டுகளில் முதல் பத்தாண்டுகளை மிகக் கடினமான மற்றும் தனக்கு எந்த வகையிலும் ஒத்துவராத பணிகளில் தாவித்தாவி கிழக்கு கரைக்கும் மேற்கு கரைக்கும் இடையில் அலைந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் தபால் இலாகாவில் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பணியாற்றினார். அவருடைய இந்தப் பணியில் எந்த உழைப்பும் இருக்கவில்லை. கடுமையான பொறுமையுடன் மூளையை பயன்படுத்தாமல் செய்யும் பணியாக இருந்தது. அவர் மிகவும் கடுமையாக சலிப்படைந்து விட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில்தான் நிலைத்திருத்தல் மற்றும் மரணம் ஆகிய இரு விஷயங்கள் அவருடைய எழுத்துகளுக்கு வித்தாக அமைந்தது.
தனது விதியை தானே நிர்ணயித்துக் கொண்ட புகோவஸ்கி தபால் நிலையப் பணியை உதறிவிட்டு தன் எழுத்துப் பணிக்குத் திரும்பினார். ஆனால் அவரைப் பற்றிய பிறர் குறிப்பிட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளில் அவர் இடைவெளியின்றி எழுதிக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்போர்டு டார்பின் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகளில் அவரது படைப்புகள் 1960ல் முதன் முதலில் வெளிவந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரூமிங்ஹவுஸ் மாட்ரிகல்ஸ் 1940 லேயே அவரது கவிதைகளை வெளியிட்டுள்ளதற்கும் ஆதாரம் தந்துள்ளார்.
உண்மை என்னவென்றால் புகோவஸ்கி ஆரம்ப காலங்களிலருந்து சுமார் முப்பது ஆண்டுகள் சிறிய இலக்கியப் பத்திரிகைகளிலும் பிரபலமாகாத பதிப்பகங்களுக்கும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தப் பதிப்பகங்கள் மிகச் சிறிய அளவில் குறுகிய வட்டத்தில் செயல்பட்டதனால் அவற்றைப் பின்பு தேடிப் பிடிப்பது கடினமாயிற்று.
பிளாக் ஸ்பேரவ் அச்சகத்தின் உரிமையாளர் ஜான் மார்டின் இவ்வாறாக சிதறிப்போன அவரது கவிதைகள் கதைகள் என அனைத்துப் படைப்புகளையும் மொத்தமாக தொகுத்து 1980ல் அவரது தற்கால படைப்புகளுடனேயே வெளியிட்டார்.
மொத்தமாக புகோவஸ்கி சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1994 மார்ச் 9ம் தேதி புகோவஸ்கியின் மரணத்திற்குப் பின் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்த விமர்சனங்களாக வந்த புத்தகங்கள் இலக்கிய உலகில் எண்ணற்றன. அவை பிரபலமாகியதும் விற்பனையில் வசூலித்ததும் சிறப்பு குறிப்பு.
"பீட் எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் வரிசையில் ஜாச் கெரோவாக், ஆலென் கிங்ஸ்பெர்க் மற்றும் பல பீட் எழுத்தாளர்களுடன் எந்த வகையிலும் தொடர்பில் இல்லாத புகோவஸ்கியின் மரபு மீறிய எழுத்துகளும் குறிப்பிட்டுச் சொல்ல இயலா இலக்கிய அணுகுமுறையும் இவரை பீட் எழுத்தாளர்கள் வரிசையில் நிறுத்திப் பார்க்கிறது வாசிப்பாளர் உலகம்.
வாழ்வில் நிறையக் கஷ்டங்களையும் எழுத்தில் தனி சுதந்திரத்தையும் கொண்ட புகோவஸ்கி தனது அத்தனை படைப்புகளிலும் தனி முத்திரை பதித்தார்.
வாழ்வையும் எழுத்தையும் கொண்டாடி விட்டுப் போயிருக்கிறான் இந்த படைப்பாளன் என்று தெரிந்ததும் பொறாமை தொற்றிக் கொள்கிறது படிப்பாளிகளுக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|