புதையல் அமரர் வல்லிக்கண்ணன்
உமையின் கவிதை
உலகின் உயிர்ப்பு. உயிரின் சக்தி.
சக்தியின் சிரிப்பு. சிவத்தின் மலர்ச்சி.
மலரின் சிறப்பு. ஜீவனின் ஓளி. ஆத்மாவின் சுடர்.
அழகு எங்கும் நிறைந்தது. கண்ணுக்கு தெரிவது.
தெரியால் ஒளிர்வது
கலையின் கலை காவியநயம்.
அழகே அனைத்து. அது வாழ்க.
வியன் வானத்திலே மோன நகை புரிகிறது அழகு.
விரிகடலில் தவழ்கிறது. புரள்கிறது. குதிக்கிறது.
துள்ளுகிறது அழகு.
பூங்காவில் புன்னகை பூத்து ஓளிர்கிறது.
பகலின் ஓளியில், இரவின் இருளில், நிலவின் கதிரில்,
வெள்ளியின் சிமிட்டில், மின்னலின் பாய்ச்சலில்
ஆட்சிபுரிகிறது அழகு.
மங்கையின் மேனியில், அவள் அங்கங்களில், கண்களில்
கன்னத்தில், குமிண் சிரிப்பில் அழகு நெளிகிறது.
மனிதனின் உள்ளத்தில் உறையும்அழகு.
பார்வையில் பிறக்கிறது எழிலுறு காட்சியாக
நரம்பில் புரளும்அழகு
கைவிரல் அசைவில் மலர்கிறது கலையாக
காலில் ஜதி பேசுகிறது நடனத்தில்.
உடலின் துவள்தலில் மின் எழில் பிரகாசிக்கிறது.
இதயக் குரல் முனகும் அழகு.
கவிதையில், காவியத்தில், இலக்கியத்தில் கனவாய் சிரிக்கிறது.
அழகு இல்லாத இடம் எது?
அழகின் சிரிப்பு பொலிவுறுத்தாதது எது?
அழகு அடியற்றது. முடிவற்றது.
அழகு ஆனந்தமானது. அணீண்டமானது ஆழமானது.
அழகை உணரலாம். ஸ்பரிசிக்க முடியாது.
அழகை வியக்கலாம். வர்ணிக்கலாம். விளக்க முடியாது.
அழகு ஓரு கலை. அதுவே தத்துவம்.
அழகே சக்தி. அதுவே சிவம்.
அழகைப் போற்றுகிறேன்.துதிக்கிறேன். வணங்குகிறேன்.
அது வாழ்க.
அழகு அழிவற்றது என்று மனம் பேசியது
குபுக்கென்று சிரித்தது மலர்.
அழகாய் அரும்பி, எழில் மிக்க போதாகி,
வனப்பாய் மிளிர்கிறது மலர்.
அழகின் களஞ்சியம்.
காலையில் மலர்ந்தது. மாலையில் சோர்ந்தது.
மறுநாள் வாடி விழுந்தது.
செடி "பாரடா அழகின் தன்மை' ! என்றது.
அழகு மாறுதலற்றது என்றேன்.
களுக்கெனச் சிரித்தாள் மங்கை.
கண்களில் கவிதை பேசியது.
முறுவலில் காந்தம் சுடரிட்டது.
கன்னக் கதுப்பிலே கதை சுவை காட்டியது.
கரும் பட்டுக் கூந்தலில், சங்குக்கழுத்தில்
மார்புமொட்டுகளில், ஏன் அவள் மேனி முழுவதும்
அழகு சிரித்தது முன்பு.
இன்றோ ?
மலரின் வாட்டம் அவள் உடலில் உறக்கம் காட்டியது.
விழித்து உணராத மூடனே, அழகின் வாழ்வை
நேரில் பார் என்றது
அவள் உருவம். தலை குனிந்தேன்.
அழகு மூப்பற்றது. வளர வளர வனப்புறுவது
என்று உள்ளம் பேசியது.
குழந்தை சிரித்தது. கிழவனைச் சுட்டியது.
குழந்தையின் சிரிப்பில் மின்மினிக் கண்களில்,
தளிர் நடையில், மழலை மொழியில்,
எழில் விளையாடியது. குழந்தை வளர்ந்தால்,
பெரியவன் ஆனால், கிழவனாகிடில்... ?
எங்கே அழகின் சக்தி ?
நரை, திரை, பிணி மூப்பு, சாவு
போதும், போதும் !
அழகு அழிவுறுவது. சோர்வது. வாடுவது . வதங்குவது. திரிவது.
பிரிந்து மாறுவது. மண்ணாவது
"நிறுத்தடா பித்தனே'! என்றது வானம்.
என்னைப்பார். என் எழிலைப் பார் என்றது கடல்
"விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை' என்றது அந்தி...
தூக்கக் கண்களை துடைத்துப் பாராடா என்றது உதயம்,
என்னைப் பார்க்க வெள்ளெழுத்தா என்றது மலை
இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது வெள்ளிகள் மின்னின
பிறை அழகு புதுப்பெண்ணின்
இளமுறுவல் போல் மிளிர்ந்தது
அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல்
கணமோர் வியப்புக் காட்டும்
வான் உடையில் அவள் கர்வமுடன் தலை நிமிர்ந்தாள்
அருவி அவள் புகழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது.
பேதையே, இவை மாறுமா ? அழகு இவற்றின் ஓளி. உயிர்.
சக்தி. அது மயங்குகிறதா, மறைகிறதா ? தேய்கிறதா ? பாராடா! பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.
சக்தி காவியம் இயற்றுகிறாள். அது அழியாதது. நிலைத்திருப்பது.
இனியது; மரணத்தைப் போல.
உண்மைதானோ ?
ஆனாலும் ...
அழகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலையைப்
போக்குகிறது. களிதுள்ளச் செய்கிறது.
அது வாழ்க.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|