மறுக்கப்படும் விஸ்வரூபங்கள் இரா. தமிழரசி
பரம்பரைப் பொருளனைத்தையும்
பரத்தமைக்கு
எடுத்துக் கொடுத்தாள் கண்ணகி
மண்மகள் அறியா
வண்ணச்சீறடி வலிக்கப்
பயணித்தாள் மதுரைக்கு
மறுபடி கோவலனை மனிதனாக்க ...
நின் பிரிவினும் சுடுமோ
பெருங்காடு என்று
பின்தொடர்ந்து வந்தாள் சீதை
கணவனின் துயரத்தைத் தாங்கிப்
பகிர்ந்து துய்க்க
சக்கரவர்த்தி திருமகனாய் உருவாக்க ...
அணுக்கத் தொண்டனாய் அவனிருக்க
இரத்தபந்தம் அனுப்பிவிட்டு
துயர்சுமக்க ஒருப்பட்டாள் ஊர்மிளை
புகுந்த வீட்டின் மானம் உயர்த்த...
பாதவடியை அரியணை சுமக்க
பாவமூட்டையை இதயத்தில் சுமந்தான்
பரதன்
பக்கத்திலிருந்தே துறவைத்துய்த்தாள்
அவன் மனைவி.
பணயப்பொருளாய் வைத்திழந்தும்
வாதாடிச் சோர்ந்து வனவாசம் தொடர்ந்து
சீவிக் குழல் முடிக்க
ஆற்றுப்படுத்தினாள் ஐவரை ....
இயக்கு சக்தியாய் இருந்தும்
மறுக்கப்படுகின்றன விஸ்வரூபங்கள்!
மனைவியருக்கு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|