உப்பின் சுவையூறிய காதல் சுகிர்தராணி
தயக்கத்தின் முட்டைகள் மீது
அமர்ந்திருக்கிறது நம்காதல்
எங்கோ ஓரிடத்தில்
மென்மையின் நரம்புகள் பூட்டப்பட்ட யாழை
நீ மீட்டிக் கொண்டிருக்கலாம்
உயரத்தில் பூக்கும்
கள்ளிப் பூக்களை உனக்குக் காட்டியிருக்கிறேன்
கடலில் குதித்துக் கரையேறும் சிறுபுயலை
உள்நின்று அறிமுகப்படுத்தி யிருக்கிறேன்
காமம் துளிர்விடும் சாயுங்காலம்
சருகுகள் பூத்துக்கிடக்கும் சாலைகளை
நத்தையின் கால் கொண்டு கடந்திருக்கிறோம்
கொடூரமாய்ப் பறக்கவிடப்பட்ட என்னுடலை
சொல்லின்
கனத்த நங்கூரத்தால் பிணைத்தபோதெல்லாம்
நீயும் உடனிருந்தாய்
பசியின் பழச்சாற்றினை நீ அருந்துகையில்
புத்தகங்களைப் பரிசளித்திருக்கிறேன்
இப்போதும் நீ பற்றியிருக்கும்
பிரியத்தின் கோப்பைகளில் மிதக்கின்றன
என் கவிதைத்துண்டங்கள்
வேறு எப்படிச் சொல்லச் சொல்கிறாய்
உப்புக்கரிக்கும் என் காதலை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|