க்ருஷாங்கினி கவிதைகள்
சூரியன் உதயத்திலிருந்து இலை விரித்து உண்ணும்
மறைந்த பின், சூடு துடைக்கப்பட்டு
இரு முனை மடக்கி, ஒன்றை
ஒன்று கட்டிக் கிடக்கும்,
உயிர் நீர் வெளியேறா வண்ணம்
அனைத்து இலைகளையும் மடக்கிக்
கையுயர்த்தி சோம்பல் முறித்து
தலைவசமுள்ள அநேகக் கண்களை
தெறிக்கும் தரையில் தனித் தனியாய்
திறந்தபடி நெடுஞ்சாலை வழியோரம்
வரிசையாய் அடுக்கி, வழிகாட்டி, நளி உமிழும்
தீபாலங்காரம் செய்யும்.
நெடு வழிப் பாதையின் தெருவோரம்
வேர் அசையாது நிற்கும் நடுவழி நடும் வாகனம்
இதனுடன் கூட மோதிச் சிதறும்
அசையும் உயிர் நாசம்.
ஒற்றைக் கண் காப்பாற்றி நடுவயிற்றில் நட்டு வைத்து
ஒளியோடு விழித்திருக்கும்
இரவு முழுவதும் பாதை ஒடும்
வாகனங்கள் அனைத்தையும்
எண்ணிக்கை அறிந்த மட்டில்
எண்ணி எண்ணி .......
**********
மரம் நடுவிழா வைபவத்தில்
நட்டு நிறுத்தப்படுகிறது.
விழா எடுக்காமலும் தெருவோரம்
ஏதோ ஒரு பெயர் தாங்கிய
இரும்பு வேலியின் நடுவில்.
நீர் அதிகம் கோராது
விலங்குகள் அண்டாது, நின்று
வேகமாய் வளரும்.
கிளையின் நுனியில் பெரிதாய் விரிந்து
கண் பறிக்கும் வண்ணம் காட்டி
வாசனை காட்டி கவர்ச்சி காட்டாமல்
திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள்
உச்சியில் பூக்கும் பூப்பது தெரியாமல்.
தானாக உதிரும் சிறுபூக்கள் கொண்டு
கண்டடையலாம் இதன் வசந்ததை
மென்மேலும் வளர்ந்து வானெட்ட
முயலாது ஒரு போதும்.
பாங்காக ஐந்தடிக்குள் தன்
உடலை நிறுத்தி வைக்கும் எனினும்
கிளை விரித்து நிழல் பரப்பும்
பெருங் கொடையாய்.
ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய்
ஒரே சிமெண்ட் வட்டத்துக்குள்
முரணின்றி இணைந்து வளரும்
எல்லோருக்கும் உகந்த தாய்
எப்போதும் உறுத்தாததாய்.
ஆங்காங்கே வளர்ந்து நிற்கும்
இமை மூடி சிதறிக் கொட்டும்
தன் கண்கள் தரை மீது
காலடி தளம் பரப்பி.
ஆனாலும் கூட இடநெடுக்கடியில் சற்றே
இடம் மாறி குறுக்காக வளர முற்பட்டால்
சட்டென்று முறிக்கப்பட்டு
நிற்கும் இப்புன்னை / பெண்ணைப்போல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|