நல்லதையா நீயின்று இல்லை ! பாவலர், மருத்துவர். சி.மா. பாலதண்டாயுதம்
அய்யாவே பாரதியே வாரும் இந்த
அடியேனின் விண்ணப்பம் சற்றே கேளும்
மெய்யாக இம்மண்ணை நீநே சித்தாய்
மேன்மையுற வழிசொன்னாய் ஊரைக் கூட்டி
பொய்யகலத் தொழில் செய்தே வாழ்வோர் மேலோர்
புறந்தள்ளும் மற்றவர்கள் கீழோர் என்றாய்
கையூட்டு கொலை கொள்ளை, சாதிச்சண்டை
காலமெல்லாம் செய்பவரே மேலோர் இங்கே !
மாதர்தமை இழிவுசெய்யும் மடமை தன்னை
மார்தட்டி தீயிட்டுக் கொளுத்தச் சொன்னாய்
தாதர்எனும் நிலையில்லை ஆண்களோடு
தையலினம் சரிநிகர்ச மான மென்றாய்
பாதிமக்கட் தொகையுள்ள பெண்க ளுக்கோ
பாராளு மன்றத்தில் மூன்றில் ஒன்றே
மீதியும்கேள் அதைக்கூட சட்ட மாக்க
மேலாண்மை ஆணினத்தோர் ஒப்ப வில்லை
சாதிகளே இல்லையடி பாப்பா என்றாய்
சாத்திரங்கள் பொய் என்றாய் இன்னும் இங்கே
மேதினியில் ஆயிரமாய் தெய்வமில்லை
மேம்பட்ட அறிவேதான் தெய்வ மென்றாய் !
வீதிக்கு ஒருசாதிக் கட்சி. மக்கள்
வேடிக்கை பார்ப்பதற்கு பலதெய் வங்கள் !
நாதியற்றுப் போனதிங்கே தமிழ்ச்ச மூகம்
நல்லதையா நீயின்று இல்லை போ ! போ!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|