கவிதாஞ்சலி: நகுலன்
எனக்கு
யாருமில்லை
நான்
கூட !
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் தான்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை.
யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது ?
எல்லாம் !
நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு/
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!
வந்தவன் கேட்டான்
“என்னைத் தெரியுமா?”
“தெரியவில்லையே”
என்றேன்
“உன்னைத் தெரியுமா?”
என்று கேட்டான்
“தெரியவில்லையே”
என்றேன்.
“பின் என்னதான் தெரியும்”
என்றான்
“உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்”
என்றேன் !
“ஒரு கட்டு
வெற்றிலை, பாக்கு
சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி
சிகரெட்
சாம்பல்தட்டு
பேசுவதற்கு நீநண்பா
இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு.”
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|