துரோகத்தின் செதில்கள்: இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
பனையை இறுக்கி
ஆக்கிரமித்து வளரும்
ஒரு ஆலமரத்தைப் போன்ற
துரோகத்தின் பட்டைகளை
உரித்து உற்றுப் பார்த்துவிட்டு
சக்கரங்களின் கீழே போட்டுக் கொண்டிருக்கிறேன்...
சொற்களை சிலுவை போலாக்கும்
கைவினைஞர்கள்
ஓட்டிச் செல்கின்றனர் சக்கரங்களை
ஒரு விடியலைப்போட்டுப் பிசைந்து
அம்பாக வார்க்கும்
முயற்சியில் தோற்கிறவர்கள்
மட்டும் என்னை
அன்போடும் பரிதாபத்தோடும்
பார்த்துச் செல்கின்றனர்.
நதியின் மெல்லலைகளின் மீது
சிற்றிலைகளைக் கிள்ளிப் போட்டுக்
கொண்டிருக்கும் சிறுவனின்
செயல் போன்றிருக்கிறது இது
எனத்தோன்றியதெனக்கு...
சிறுவர்கள் கிள்ளிப்போடும்
இலைகள் போய்ச்சேருமிடம்
யாதெனவும்...
கிள்ளப்பட்டத் தாவரங்களின்
காம்புகளில் என்ன மாதிரியான
வலி நீடித்திருக்குமெனவும்
கேட்டு வைக்கலாமென
தற்காலிகமாக நான்
சக்கரங்களைத் தவிர்த்துப் புறப்படுகிறேன்.
ஒரு முட்டுச்சந்தில்
அலங்கரிக்கப்பட்ட விற்பனை நிலையத்தில்
பிள்ளைகளுக்கான வேலைப்பாடுகள் நிøந்த
நுகங்களை
விலை கேட்டுவாங்கும் நீங்கள்
உங்கள் புராதன வீட்டின்
மொட்டை மாடிச்சுவர்களில்
ஊன்றி வளர்க்க
அழகான உரையிடப்பட்ட
ஆலின் விதையொன்றையும்
பரிசாகப் பெற்றுக்கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டே போகிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|