கீதாஞ்சலி பிரியதர்ஷினி கவிதைகள்
இப்போதும் பேசுகிறேன்
தேகப் பயிற்சி செய்கிற ஆசையில் தன்
கதைகளை தொலைத்து விடுகிறவன்
கடற்கரை மணலில் அலைந்து திரிகிறான்
எப்போதும் சில குழந்தைகள் இறப்பதற்கென்று
தனி இடங்களை தேர்வு செய்கின்றன, நம்
பாட்டிகள் மற்றும் சிலரின் வீடுகளை உள்
விழுங்கியபடி சாலை அகலமாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் சில சிங்கங்கள் இன்று கட்டின
பசுந்தழைகளை தின்று கொண்டிருக்கின்றன
முதலைகள் மறைந்த ஆறுகளில் இறங்கும்
மணல் லாரிகள் செல்லும் வேலையை
சொன்னபடி செய்து விடுகின்றன, வெறுப்பற்ற
தனது செவ்வகத் திரையில் அழைப்பவரின்
பெயரை ஒளிர விட்டு உறுமுகிறது
எனது படுக்கையில் ஒரு அலைபேசி
புகலிடக் கவிதைகள்
அவன் வீடு
அவனைப் போலவே
ஏதுமற்று தினம்
மாறிக்கொண்டே இருக்கிறது
என் வீடு
மாற மறுத்து
என்னைப் போல
இடிபாடுகளுடன் நிற்கிறது
நேற்றும் அவன்
தன் நம்பிக்கையை
என் வீட்டில்
வைத்து விட்டு சென்றான்
காற்றும் வெளிச்சமும்
தாராளமாக இருக்கட்டும்
என்றும் சொன்னான்
இன்று அவன் வீட்டில்
வேறு வேறு நம்பிக்கைகள்
உலவிக் கொண்டிருப்பதாக
சொல்லிக் கொண்டிருக்கிறான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|