அன்னைத் தமிழ்க் காக்க ஆர்த்தெழு பாவலர் தமிழவன்
அன்னைத் தந்திட்ட அன்பு மொழி
அழகுத் தமிழ் என்பதை அறிந்திடு
உன்னை வளர்க்கும் உயிர்மொழி
ஓங்கு தமிழ் ஒன்றேதான் என்றறி
கண்ணைப் போல அன்னையைக் காப்பதுதான்
தனயன் அவனது தலைசிறந்த கடனாகும்
விண்ணைப் போல உயர்ந்துள்ள தமிழையே
விரைந்து நீயும் வளர்க்கவே விரைந்திடு.
பொன் மொழியாம் தமிழதனைப் போற்றிடு
பொங்கிவரும் உணர்வினால் நீஉளம் பூரித்திடு
என்றும் தமிழே உன்னிரு விழிகள் என உணர்ந்திடு
ஏழ்க்கடலுக்காப்பாலும் இலங்கிவரும் நன்மொழி
அன்று அந்த அருந்தமிழ் அறிஞரெலாம்
ஆன்ற தமிழ்மொழியினை ஆருயிராய்க் கொண்டனர்
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திட்ட செம்பருதிமால் கலைஞரும்
சேர்ந்து உன் சிறப்பினை செம்மொழியெனச் செப்பினார்.
இன்றந்த மொழியுமே ஏற்றம் பெற்று வளர்ந்திட
எழுக நீயும் தமிழனே ! எழுக நீயும் எழுகவே !
நன்றிந்த தமிழினை நன்கு நீயும் காத்திட
நாளும் சோராதுழைப்பாய் தோழனே !
சென்றிடும் திசையெலாம் செந்தமிழே முழங்கிட
சேர்ந்தே நீயும் சிறப்பாக உழைத்திடு
பொன்னுலகம் காணவே புறப்படு ! புறப்படு !!
போற்றி வளர்க்கப் புறப்படு ! புறப்படு !!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|