ஐக்கூவில் சமத்துவபுரம் புதுவை தமிழ்நெஞ்சன்
தேனீர் கடையில்
இரட்டைக் குவளை
சமத்துவபுரம்
பெரியார் பிறந்த மண் பகுத்தறிவு மண் என்றெல்லாம் போலியாக சொல்லிக் கொண்டிராமல் உண்மை நிகழ்வுகளை அப்படியே காணும் போது அதிர்ச்சியாகவும், சினமாகவும் இருக்கிறது.
சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்
பாலபாரதியின் பார்வையில் மெய்யை பொய்யாய் சொல்பவரின் நடுவில் அதாவது செம்மறி மந்தையில் வெள்ளாடு போல நிமிர்ந்து சொல்கிறார்.
சாதி வேறுபாடுகளுக்கு
சர்க்கார் கொடுத்த சாட்சியங்கள்
சமத்துவபுரம்
நம் அறிவிற்கு எட்டும் படி மடையர்களின் தலையில் குட்டும் படி அரசின் திட்டம் உயர்வானதல்ல மட்டமானது என்பதை மானவுணர்வோடு வெளிப்படுத்துகிறார் எட்வின் ராஜ்.
சமத்துவபுரத்தில்
மலரத் தொடங்கியது
சாதி மல்லிகை
சாதி மல்லிகை என்பது நாம் வைத்த பெயர். மலரில் கூடவா சாதி என்பதை சுட்டெரிக்கும் சொல்லோடு அது சமத்துவபுரம் என்கிற இடத்தில் கருகாமல் மலர்வதை கண்டு கொதிக்கிறார் பொன்குமார்.
சமத்துவபுரம்
ஒரே குறை
ஊருக்கு வெளியே.
அரசு என்பது ஊருக்கு நடுவில் சமத்துவத்தை கொண்டு வராமல், வரவிரும்பாமல் சேரிகளும் அதில் இருப்பதால் அது வெளியே கொண்டு போக படுகின்ற இழி நிலையை சொல்கிறார் ஏ. வி. கிரி .
மனிதம் இழப்பதற்கு
சாதிகளையே உரமாக்குவோம
சமத்துவபுரம்
கவிமுகிலின் சிந்தனை வென்றால் சாதி எருவை மாந்த நேயம் பூக்கச் செய்யலாம்.
சமத்துவபுரத்தில்
சாதிப்படுகொலைகள்
மீண்டும் தலைப்புச் செய்தி
ஆலா நமக்கு சொன்ன செய்தி. மீண்டும் வருகிறது. எப்போது நிற்குமோ அன்றுதான் நாம் மாந்தர்களாவோம்.
ஒரே கட்சி
பல சாதிகளாய் ஆனது
சமத்துபுரம்
சாதிவேறுபாடுகள் நீங்க வேண்டும் என்பதற்காக உருவானது என்கிற சமத்துவபுரங்கள் சாதி புரங்களாக மாறிப் போன கேட்டை கேசவ் சுட்டுகிறார். பலசாதிகளாய் பிரிந்து அதுவும் ஒரு சாதிகளின் தொகுப்பான ஊர்தான் என்று சமத்துவ புரங்களால் சாதிகளை ஒழிக்க முடியாது என்பது தெளிவாக புரிந்து போனதொன்று. அப்படி இருக்க ஏனிந்த சமத்துவபுரம் என்கிற பெயர்.
தடியரசு என்றாலும் குடியரசு என்று பெயர் வைத்திருப்பது போலவா? ஆம் தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரம் போலத்தான் இருக்கிறது. அது எப்போது சாதி, மதம், தீண்டாமை இல்லாத மாந்தர்கள் வாழுகின்ற நாடாகும்.... அன்றுதான் நாம் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டோம் என்பதாகும்.
ஊர் டீக்கடை
பெயர் சமத்துவம்
ரெட்டை டம்ளர்
இரட்டைக்குவளை இன்று மூன்றாகிவிட்டது. உள்ளூர் உயர் சாதி என்று சொல்லிக் கொண்டு நம்பிக் கொண்டிருப்போருக்கு கண்ணாடி குவளை, தாழ்த்தப்பட்டவர் என்பவர்களுக்கு மூங்கில் குழாயில் அல்லது அலுமினியக் குவளையில் கழுவி வைத்து விட வேண்டும். உள்ளூருக்கு வரும் அயலூர்காரர்களின் சாதி தெரியாமல் சிலர் உயர் சாதியாக இருந்து விட்டால் அலுமினியக்குவளையில் எப்படி கொடுப்பது தாழ்ந்த சாதியாக இருந்து கண்ணாடிக்குவளையில் கொடுத்து விட்டால் தீட்டாகி விடும் அல்லவா? எனவே நெகிழிக்குவளையில் தேநீர் கொடுக்கும் முறையில் இன்றுவரை தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுமை தொடர்கிறது.
ஆனாலும் இந்தியா ஒளிர்கிறதாம் 400 கோடி விளம்பரத்தில் செய்கின்றனர். நம் வாழ்வீடுகளை ஒளிரச் செய்கின்ற எதையும் செய்யாத இந்த விளம்பரங்கள். தேர்தல் காலத்து பயன் கருதியே செய்யப்படுகிறது.
கொழுந்து விட்டு எரிகிறது
சமத்துவபுரத்தில்
சாதீ
வெ. கலிவாதன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|