புறந்தள்ள முடியாத புதுக்கவிதைகள் வே. சபா நாயகம்
கவிஞர் மருதூர் மறவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கிளி இறகு' அவரது மனித நேயத்தையும், கூர்த்த சிந்தனையையும், வாழ்வை கூர்ந்து நோக்கும் பார்வையையும் நமக்குக் காட்டுகின்றது. கவிஞர் தாமரை அணிந்துரையில் கூறியுள்ளபடி, வாழ்க்கையை அதன் முரண்பாடுகளை, காலபிணக்குகளை சின்னச் சின்ன நிகழ்வுகளில் இழையோடும் பசிய நினைவுகளை தன் எளிய சொற்களால் இதம் தரும் இனிய கவிதைகளாக ஆக்கி இருக்கிறார். ஒரு கலைஞனுக்குரிய கவிஞனுக்கு வேண்டிய அழகு உபாசனை அவருக்கு வாய்த்திருக்கிறது.
தனக்கு கனிப்பளித்த இளமை தன்பிள்ளைக்கு சிறையாய் அமைந்துள்ள தடர்த்த சோகத்தை காலச்சிறை என்கிற கவிதை சொல்கிறது பலவித முதல் அனுபவங்கள் பலருக்கு இனிய நினைவுகளும் சிலருக்கு வாழ்க்கையை குடிக்கும் துயரமாகவும் இருப்பதை ‘முதன் முதலாக' கவிதையில் காட்டுகிறார். கவிஞரின் வானம் பார்க்கும் பூமிகள் சமகாலப் பார்வை கொண்டதாகும். மழைநீர் சேகரிப்பு பலன்களை கலைரசனையோடு ‘மழை அறுவடை' கவிதை சொல்கிறது. ‘வரிசைமீறல்' கவிதைகளில் கவிஞரின் உயிர் இரக்கம் மனித நேயம் பிற ஜீவன்களின் நேயமாகவும் கசிவதை உயிர் இரக்கத்தில் நையாண்டியாகவும் வான்வழியில் அனுதாப உணர்வோடும் வெளிப்படுகின்றன.
வாழ்வில் வாய்ப்பு பெற்றவர்க்கே வாழும் அதிர்ஷடம் நேர்வதை நிகழ்வு தகவு ஆதங்கத்தோடு சொல்கிறது. ‘அன்புள்ள திருடா' மென்மை பூக்க வைக்கும், அழகான அனுபவ ஆதங்கத்தைக்காட்டுகிற சிறப்பான கவிதை நாம் அனைவருக்கும் நேர்ந்திருக்கிற ஒரு யதார்த்தக் காட்சியை பொறுப்பு கவிதையில் மீளப்பார்க்கிறோம். தண்ணீர்க்குழாயை லாவகமாக திறந்து குடிக்கிற குரங்கு அதை மூடும் பொறுப்புணர்வு இல்லாததைக்காட்டும் கவிஞர் சமுதாயத்திலும் இப்படி இருக்கிற பொறுப்புணர்வற்ற மாந்தரை இடித்துக் காட்டுகிறார்.
‘செவித்திறன்' என்கிற கவிதை ஒரு அருமையான அங்ககவிதை சுற்றுப்புறச்சூழல் கேட்டில் சிந்தனையாளர்களையே அதிகம் பாதிக்கிற ஒலிமாசு பற்றி அற்புதமாகப் பேசுகிறது கவிதை இது நயமான நையாண்டி ‘பாதுகாப்பு' என்கிற கவிதையும் மனித பண்பின் அவலத்தை நையாண்டி செய்கிற கவிதைதான். பூட்டு தண்ணீர்க் குவளை பெருமாள் கோவிலுக்குதான் என்று சிரிக்கிறார் கவிஞர் இன்னும் இப்படி நிறைய யதார்த்தம் காட்டும் இயல்பான வலிந்து கட்டாத கவிதைகள். அங்கதமும் நகைச்சுவையும் அநேக கவிதைகளில் நம்மை மகிழ்விக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இது அமைவது பெரிய வரம் ! கவிஞர் மருதூர் மறவனுக்கு அது கிட்டி இருக்கிறது ‘தீவுகள், மீசை, எழுதுகோல், விகிதக்கணக்கு' போன்ற கவிதைகள் அதை நிரூபிக்கின்றன.
புதுக்கவிதைகளைப் புறந்தள்ளுபவர்களுக்கு விண்ணப்பமாய் ஒரு நயமான கவிதையை ‘மரபுத்தோழர்' என்ற தலைப்பில் கவிஞர் எழுதி இருக்கிறார். மரபுக்கவிதை நடப்புக்கு சரிப்பட்டு வராது, நேர அருமை என்றெல்லாம் வாதிடுகிறார். சுவையற்ற நுனிக்கரும்பின் சாராய் இன்று அதிக புதுக்கவிதைகள் இருப்பது தான் மரபுக் கவிதைகளின் புறந்தள்ளலின் ரகசியம் மருதூர் மறவனின் புதுக்கவிதைகள் போல மனிதநேயமிக்க ஆதரிக்கும் சமுதாயமும் அனுபவ யதார்த்தங்களை இவ்வளவு எளிதாய் ரசமாய் அழகாய்ச் சொல்லமுடிந்தால் புதுக்கவிதையை யாரும் புறந்தள்ளப் போவதில்லை. ‘கிளி இறகு' மூலம் கவிஞர் மருதூர் மறவன் அதை மெய்ப்பித்திருக்கிறார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|