இன்னொரு வானம் எங்கும் இல்லை!
கவிஞர் பல்லவன்
அன்பகத்தைக் காட்டுகின்ற கருணைக் கண்கள்!
அறிவகத்தைச் சுட்டுகின்ற அகன்ற நெற்றி!
மென்மையுடன் சென்றெதையும் தாங்கும் நெஞ்சம்!
மேதையென அறிவிக்கும் அடுக்குப் பேச்சு!
புன்னகைக்கும் வெற்றிலையைக் குதப்பும் செவ்வாய்!
பொடியோடு தொடர்புகொளும் மூக்கடைப்பு!
தென்னகத்தை அளந்துவந்த வைரக் கால்கள்!
திருவுருவம் தெகிறதா அண்ணன் தானே?
ஏழைகளின் இதயம் யார்? எளியர் வாழ்வின்
இருள்காலை உதயம் யார்? அறிவி யக்கப்
பேழையிலே வாழ்ந்திருந்த அறிவு நூல் யார்?
பேசிவந்த முரசொலியார்? காஞ்சி தந்த
வாழையெனப் பரம்பரையை வளர்த்துச் சென்ற
வரலாற்றுக் காவியம் யார்? வாழ்வு யாராம்?
கோழைகளின் கூன்நிமிர, குருதி பொங்கக்
குரல் கொடுத்த அரிமாயார்? அண்ணன் தானே?
தித்திக்கும் முத்தமிழன் வாழ்வுக் காகத்
தேய்ந்துவந்த சந்தனமாம் எவரின் தேகம்?
கொத்தவந்த வல்லிந்திக் கழுகைத் தீய்கக்
கொதிதெரிந்த உலைக்களமாம் எவரின் நெஞ்சம்?
எத்திசையும் புகழ்மணக்க இனிது வாழ்ந்த
இனவீழ்ச்சி கண்டழுதது எவரின் கண்கள்?
தத்திவரும் தம்மகவை அணைக்கும் தாய்போல்
தமிழகத்தை அணைத்துவந்தது எவரின் கைகள்?
கூரார்ந்த சொல்வீச்சால் மௌடீகத்தின்
குலைநடுங்கக் களங்கண்டது எவரின் நாக்கு?
வேராழ்ந்த தீண்டாமை முள்மரத்தை
விழவைத்த சூறைக்காற்று எவரின் மூச்சு?
சூராதி சூரர்களைத் தேர்தல் போல்
சுருண்டுவிழத் திரண்டெழுந்தது எவரின் தோள்கள்?
ஆயத்தின் வஞ்சகத்தை, சூழ்ச்சி தன்னை
அலறியழ மிதித்துவந்தது எவரின் பாதம்?
பள்ளத்தைச் சமன்செய்து சீர்ப டுத்தப்
பகலிரவாய் உழைத்தவர் யார்? ஏழை கண்ணில்
வெள்ளம்போல் உப்புநீர் வழிந்தி டாமல்
வெள்ளிநிலா போல்சிரிக்கச் செய்தவர் யார்?
உள்ளத்தின் இருளழிக்கும் ஒளிவிளக்காம்
உயர்கல்வி எளியோர்க்கும் அளித்தவர் யார்?
உள்ளத்தால் உயர்ந்தோங்கி உலகத் தான்
உள்ளமெலாம் வாழுகின்ற அண்ணன் தானே?
சொந்தமிகு ஓர்தாயின் வயிறு நம்மைச்
சுமப்பதற்கு முடியாத காரணத்தால்
பந்தமுடன் தனித்தனியே தாய்வ யிற்றில்
பாசமுடன் பிறந்திட்டோம் என்று அண்ணா
சிந்தையெலாம் சிர்த்துவக்கச் சொன்னார்! இந்தச்
செகமெங்கும் அரசியலில் குடும்பப் பாசம்
தந்துயர்ந்த தலைவருண்டா? இந்நிலத்தைத்
தமிழ்நாடு என்றழைத்தவர் யார்? அண்ணன் தானே?
அணிவிழாவாய் அண்ணாவின் ஓர் நூற்றாண்டை
ஆவலுடன் கொண்டாடக் காத்திருந்தோம்!
மணிவிழாவைக் கொண்டாடும் முன்பே அண்ணா
மறைந்துவிட்டார்! மக்கள் நெஞ்சில் நிறைந்து விட்டார்!
தனி மனிதர் இல்லை அவர்! கோடி கோடி
தம்பிமார் ஆவியெலாம் உறையும் உயிர்மெய்!
இனி ஒருவர் அவர்போல இந்த மண்ணில்
எவர் வருவார்? இன்னொருவான் எங்கும் இல்லை!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|