பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு
வி.ஆர். கிருஷ்ண அய்யர் மடல்
2008 ஆகஸ்டு 19
வணக்கத்திற்குரிய திரு கருணாநிதி அவர்களுக்கு.
திறன்மிக்க நிர்வாகத்திற்காகவும் போற்றுதலுக்குரிய கருணைக்காகவும் உங்களைப் பெரிதும் மதிக்கிறேன், உங்களுக்கு அரிதாகவே எழுதக்கூடியவன் என்றாலும், ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக இப்போது இக்கடிதத்தை எழுதுகிறேன், மகாத்மா காந்தி முதல் அன்பிதயம் கொண்ட ஒவ்வொருவன் கோரிக்கையும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டு மென்பதே, ஐக்கிய நாடுகள் அமைப்பு மரண தண்டனையை எதிர்க்கிறது, இந்தியப் பண்பாடும் மரண தண்டனைக்கு எதிரானதே, மரண தண்டனை விதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஒருபுறம் இருக்க. அரசமைப்புச் சட்டத்திலேயே கருணை காட்டும் மேலுமை உள்ளது, இதனைப் பயன்படுத்தி மரண தண்டனையைக் குறைக்க முடியும், முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாநில ஆளுநரும் நடுவண் உள்துறை அமைச்சரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவரும் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப் பெற்ற குற்றவாளியின் தண்டனையைக் குறைத்து அவரை விடுதலை செய்யலாம்,
நீண்ட பல ஆண்டுகளுக்கு முன் நான் கேரள ஆளுநருக்கு எடுத்துச் சொல்லிப் பலருக்கும் கொலைத் தண்டனையைக் குறைக்கச் செய்தேன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது. நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்திருப்பினும் அரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் கருணை அதிகாரத்தைக் கையிலெடுத்துக் குற்றவாளியைக் காப்பாற்றலாம் என்று வாதிடக் கேட்டுள்ளேன், இந்தக் கருணை அதிகாரம் வடிவ அளவில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரைச் சார்ந்தது என்றாலும். எப்போதுமே முதலமைச்சர் அல்லது நடுவண் உள்துறை அமைச்சன் பரிந்துரைப்படியே செலுத்தப்படுகிறது, இப்போது உங்கள் மாநிலத்தில் மரண தண்டனைக் கைதியாக இருந்து வரும் திரு. அ. ஞா. பேரறிவாளனுக்கு அரசமைப்புச் சட்டப்படியான கருணையை நல்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன், இந்த வழக்கில் கருணை காட்டுவதற்கு நற்பெரும் காரணங்கள் உண்டு, அ.ஞா. பேரறிவாளன் மரண தண்டனைக் கைதியாக உள்ளார். அவர் கடந்த 17 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் அடைபட்டு இருப்பதாக அறிகிறேன், தனிமைச் சிறையே ஒரு கொடுவதைதான், காலமெல்லாம் தலைக்குமேல் கொலைத் தண்டனையோடு தனிமைச் சிறையில் 17 ஆண்டுகள் என்பது எண்ணிப் பார்க்க முடியாத வேதனை. இந்த வேதனையே தண்டனைக் குறைப்புக்கு ஒரு பொருத்தமான காரணம்தான் என்றகருத்தை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, பொறுப்புள்ள குடிமகன் என்றமுறையிலும். உணர்ச்சியுள்ள சட்டவியலன் என்ற முறையிலும். அனுபவம் வாய்ந்த உச்ச நீதிமன்றநீதிபதி என்றமுறையிலும் என் கடமையாகக் கருதி இவ்வேண்டுகோளை உங்களுக்கு விடுக்கிறேன்:
பேரறிவாளன் இத்தனை ஆண்டுகளும் தலைக்குமேல் தூக்குத் தண்டனை தொங்கிக் கொண்டிருக்கும் வேதனையோடு நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடியுள்ளார் என்பதால் முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் அருள்கூர்ந்து தமிழ்நாடு ஆளுநருக்கு அதிகார முறைப்படி எடுத்துச் சொல்லி. பேரறிவாளனின் தண்டனையைக் குறைத்து அவரை விடுவிக்கச் செய்யுங்கள், தனிமைச் சிறையென்பது தாங்க வொண்ணாத் துயரம். அதுவும் 17 ஆண்டுகள்! கம்பிகளுக்குப் பின்னால் கழிந்துள்ள நெடிய ஆண்டுகள். உயிரோடும் உள்ளத்தில் வலியோடும் வயோதிகப் பெற்றோர். மாறிவரும் உலகம் அவருக்கு மட் டும் அப்படியே நிலைத்திருக்க, அவர் பார்ப்பதும் உணர்வதும் நான்கு சுவர்களும் இரும்புக் கம்பிகளும் மட்டுமே, இதுவே கண்ணீராலும் கழுவ முடியாத பெருந் துன்பம்தான்,
இதோ வருகிறது ஒரு பெரு விழா - புகழார்ந்த அரசியல் மேதகையாகவும் தனிச் சிறப்பு மிக்க முதலமைச்சராகவும் இருந்து கொடுநோயின் தாக்குதலால் அகாலச் சாவடைந்த சீரிய மனிதநேயர் திரு அண்ணாதுரை அவர்களின் நூற்றாண்டு விழா! அவர் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நல்வாய்ப்பை முன்னிட்டு. ஒரு மனிதநேயமிக்க முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் தமிழ்நாடு ஆளுநரின் கருணை அதிகாரத்தைச் செலுத்தப் பரிந்துரைத்து திரு அ,ஞா, பேரறிவாளனை விடுவிக்க வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் ஆழ்ந்த கருணைமிக்கவர் என்பதை அறிவேன், உங்கள் ஆளுநர் மாண்புமிகு சுர்ஜித் சிங் பர்னாலா பழுத்த அனுபவம் பெற்றஅரசியல் மேதகை. கண்ணியமிக்க பண்பாளர். நீண்ட காலமுன்பே தொடர்பு இழந்துவிட்டேன் என்றாலும் தனிப்பட்ட முறையில் என் நண்பரும் கூட, தனிமைச் சிறையில் சொல்லொண்ணாத் துயரம் அனுபவித்துவரும் மனிதர் ஒருவன் உயிரைக் காப்பாற்றும்படி உங்களையும் ஆளுநர் திரு சுர்ஜித் சிங் பர்னாலாவையும் மெத்தப் பணிவுடன் வேண்டுகிறேன், அம்மனிதர் தமிழ்நாட்டிலும் தன் தாய்நாட்டிலும் தனதில்லத்தில் விடுதலை மூச்சுவிடத் தகுதியுடையவரே, சிறையில் வாடும் பேரறிவாளனின் வேண்டுகோள் விண்ணப்பமும் (இத்துடன் இணைத்துள்ளேன்) என்னைச் சந்தித்த அவருடைய தாயாரின் கண்ணீரும் என்னை மனமுருகச் செய்து விட்டன.
உணர்தலே மனிதம். கருணை காட்டுதலே ‘கருணா’.
வணக்கத்துடன்.
உண்மையுள்ள.
வி,ஆர், கிருஷ்ண அய்யர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|