மருதூர் அணைக்கு ஆபத்து
வியனரசு
ஆங்கிலேயேர்களால் வியந்து பாராட்டப்பட்ட நேர்த்தியான தொழில் நுட்பத்துடன், பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி மருதூர் அணையின் கொள்ளளவைக் கூடுதலாக்கும் திட்டத்தால் அணையின் பாதுகாப்பிற்குப் பேரிடர் (ஆபத்து) ஏற்பட்டுள்ளது.
ஏறக்குறைய 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதற்காக, தாமிரபரணி ஆற்றின் நீரோட்டம், கடினப்பாறையின் நிலவியல் தன்மை, அணைக்கு மேல்பகுதியில் அமைந்துள்ள பரப்பளவு, சிற்றாறு மற்றும் காட்டாறு ஆகிய மழைகால ஆறுகள் தாமிரபரணியில் வந்து கலக்கும் முக்கூடல் ஆகியவற்றை மிகச் சரியாக ஆய்வு செய்து, ஆற்றின் நீரோட்டத்திற்கு எதிர்முனை உள்வட்ட வடிவில் நெளிவு, கழிவு, வலைவு குழைவுடன் ஆற்றின் குறுக்கே ஒரு மலைப்பாம்பு ஒன்று படுத்தியிருப்பதைப் போன்று நீர்போக்குக்கு ஏற்ற தகுந்த பாதுகாப்புடன் கட்டப்பட்ட கல்லணையாகும் மருதூர் அணை, ஆற்றின் மொத்த அகலத்தை விட மூன்று மடங்கு நீளம் (4097 அடி) கொண்டது இதன் தனிச்சிறப்பு.
இந்த அணையின் இரு கரைப்பகுதிகளிலும் உள்ள நன்செய் வயல்களிலிருந்து, ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் உடனுக்குடன் நீர்வடிவம் தொழில்நுட்பத்துடன் அணைக்கட்டப்பட்டது தமிழர்களின் நீர்ப்பாசன கோட்பாட்டிற்கும் அறிவுத் திறத்திற்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.
தமிழர்களின் முன்னோர்களால் கட்டப்பட்ட இத்தகைய சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய பழமையான அணையைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தொலைநோக்கு பார்வையும் இருக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர் இதற்கு மாறாக மக்கள் நலனில் அக்கறையற்றப் போக்குடன் தமிழர்களின் தொன்மை அடையாளங்களையே அழிக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
உருபா 30 கோடி திட்டத்தில் வெள்ளப்பெருக்குக் கால உபரிநீர் கால்வாய் என்ற சடையநேரி கால்வாய்த் திட்டத்திற்கு அணையின் கொள்ளவுத் திறனைக் கூடுதலாக்குகிறோம் என மருதூர் கல்லணையின் மேல் சுமார் 4 அடி உயரத்திற்கு சிமெண்ட்டு கலவை (காங்கிரேட்) போட்டு உயர்த்தியிருப்பது அணையின் தாங்கு திறனையும் பழமையையும் கவனத்தில் கொள்ளாமல் செய்த அடாத செயலாகும்.
ஏற்கனவே அணையில் நீர்க்கசிவு இருக்கிறது என அணையின் பல இடங்களில் அவற்றை உள்பக்கமாக கலவைச் சாத்து போட்டு அடைத்திருக்கும் நிலையிலும், மருதூர் அணைக் கட்டப்பட்டதற்கு 367 ஆண்டுகளுக்கு பிறகு கட்டிய திருவைகுண்டம் அணையின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது ஆகையால் வலிமை இழந்த திருவைகுண்டம் அணைக்கு பதில் புதிய அணைகட்ட வேண்டுமென இதே பொதுப்பணித்துறையினர் அரசுக்கு அறிக்கை அனுப்பிவிட்டு மருதூர் அணையில் அதற்கு நேர்மாறான நடவடிக்கையில் இறங்கியிருப்பதை என்ன காரணம் என தமிழக அரசு கண்டறிய வேண்டும்.
மருதூர் மேலக்கால்வாயில் உருபா 9 கோடியில் நடைபெற்று வரும் சடையநேரிக் கால்வாய் விரிவாக்கப்பணிகள் முறையாகவும் உரிய காலத்திலும் நடைபெறவில்லை. தற்போது நடைபெறுவது போல் பணிகள் நடைபெற்றால் அடுத்த வெள்ளக் காலத்தில் அனைத்தும் இடிந்து கால்வாய்க்குள் விழுந்து உழவர்களின் பணிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி விடுவதுடன், பாசனதாரர்களை பெரும் இழப்புகளுக்கு ஆளாக்கும் அவல நிலை உருவாகும். ஆகையால் தமிழக முதல்வர் கலைஞர் உடனடியாக, சடையநேரிக் கால்வாய் திட்டக் கோப்புகளைப் பார்வையிட்டு அணையில் நடைபெற்று வரும் வேலைகளை நிறுத்துவதுடன் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
உரிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து சரியான வகையில் வேலைகள் நடைபெற்று திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற உதவும்படியும் தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|