மத வெறியா? நல்லிணக்கமா?
பங்கிம் சந்திரசட்டர்ஜி ஒரு மத நல்லிணக்கவாதி என்பதை அன்றைக்குப் பலரும் உணரத் தவறி விட்டனர்.
``பல தெய்வ வழிபாடு உண்மையான இந்து மதத்துக்கு ஓர் இழிவாகும்'' என்பதை ஆனந்த மடம் நாவலில் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார்.''
தினமணியில் பேராசிரியர் தி.ராசகோபாலன்.
பல தெய்வ வழிபாடு உண்மையான இந்துமதத்துக்கு ஓர் இழிவாகும்'' என்று பங்கிம் சந்திரர் சுட்டிக் காட்டுவதில் மத நல்லிணக்கம் எங்கே வழிகிறது?
``என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் வேண்டாம். அவற்றை வணங்கவோ சேவிக்கவோ வேண்டாம்'' என்று மோசேக்கு `அருளப்பட்ட' பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை பங்கிம் சந்திரர் இந்துக்களுக்கு வழங்குகிறார் என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன பொருள்?
ஒன்றுக்குள் ஒன்று அடைக்கலம்?
``அமெரிக்காவில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள்; நாத்திகர்களும் இருக்கிறார்கள். அந்த நாட்டு நாணயங்களில் `இன்காட் வீ டிரஸ்ட்' (நாம் கடவுளுக்குள் அடைக்கலம்) என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்காக எந்த நாத்திகரும் அதனைப் புழக்கத்தில் விடக் கூடாது எனச் சொல்வதில்லை.''
-தி. இராசகோபாலன்.
``இன்காட் வீ டிரஸ்ட்'' - கடவுளுக்குள் அடைக்கலம் - என்பது குறித்து ரஸ்ஸல் ஒரு முறை சொன்னார்:
``நாம் கடவுளுக்குள் அடைக்கலம்
கடவுள் ரூபாய் நோட்டுக்குள் அடைக்கலம்''
ரஸ்ஸலின் கிண்டலை அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் `வால்ஸ்ட்ரீட்' பேர்வழிகள் மேலும் வளர்த்தெடுத்துச் சிரித்துக் கொண்டார்கள்:
``மக்கள் கடவுளுக்குள் அடைக்கலம்.
கடவுள் ரூபாய் நோட்டுகளுக்குள் அடைக்கலம்.
ரூபாய் நோட்டுக்கள் நம்மிடம் - வால்ஸ்ட்ரீட் பேர்வழிகளிடம் அடைக்கலம்!''
அங்கே அத்வானிகள் இல்லை
``கிரேக்க இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் இடம் பெற்ற தேவதைகளைக் கிரேக்கக் கவிஞர்கள் எவ்வாறு ஒரு வீரயுகத்தை உருவாக்குவதற்குத் தங்கள் தங்கள் கவிதைகளில் கையாண்டார்களோ, அதைப் போலத்தான் பங்கிம் சந்திரரும் ஓர் ஒருங்குபட்ட தேசிய உணர்வை நாடு முழுவதும் உருவாக்குவதற்குத் துர்க்கை, சரசுவதி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.''
- தினமணி (7.9.2006)யில் தி.இராசகோபாலன்.
கிரேக்க இதிகாசங்கள் மனிதனின் கற்பனை வளத்துக்குச் சான்றாக - இலக்கியப் பொருளாக - மட்டுமே இன்றுவரை அங்கே கருதப்படுகின்றன.
அந்த இதிகாச நாயகனுக்குக் கோயில் கட்டியே தீருவோம் என்று அங்கே அத்வானி யாரும் ரதயாத்திரை நடத்தி, பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தகர்த்து, பயங்கரவாதத்துக்கு விதை தூவுவதில்லை.
படம் அல்ல செல்லுமா என்பதே முக்கியம்
வளைகுடா நாடுகளில் அந்தந்த நாட்டு மன்னர்களின் உருவங்கள் அந்தந்த நாட்டுக் கரன்சிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதற்காக, உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதனைத் தொடமாட்டேன் எனக் கூறுவதில்லை.''
-தி.இராசகோபாலன்.
வளைகுடா நாட்டு ரூபாய்களில் தி.இராசகோபாலனின் படம் அச்சிடப்பட்டிருந்தால்கூட யாரும் எதிர்க்க மாட்டார்கள். அவர் மன்னராக இருக்க வேண்டும்; அவ்வளவுதான்.
கடவுள் மிகப் பெரியவர் என்பது நம்பிக்கை.
மன்னர் மிக ஆற்றலுள்ளவர் என்பது எதார்த்தம்.
பொதுவில் ரூபாய் நோட்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? யார் படம் அச்சிடப்பட்டிருக்கிறது? என்று யாரும் பார்ப்பதில்லை.
அது எத்தனை ரூபாய்? செல்லுமா செல்லாதா என்பதுதான் முக்கியம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|