இதயத்தால் பாருங்கள்
கவிஞர் பல்லவன்
நடைபாதை
ஓரத்தில்
நாய் ஒன்று
செத்துக் கிடந்தது!
மூக்கைப் பிடித்தவாறு
முகம் சுளித்தவாறு
ஒதுங்கிப் போனார்கள்
சீடர்கள்.
ஒரு
நந்தவனத்தை
ரசிப்பதைப் போல
அந்த
நாற்றச் சூழலில்
நாயை
ரசித்துக் கொண்டு
இருந்தார்
புத்தர் பெருமான்.
குடலைப் புரட்டும்
அந்த இடத்தைவிட்டு
அகலாமல்
நின்று நிதானித்துப்
பார்த்துக் கொண்டு
இருக்கிறாரே
அறிவாசான்.
நோய்த் தொற்று
ஏற்படும் முன்
வந்துவிடுங்கள்
ஐயனே!
அவசரப்படுத்தினார்கள்
சீடர்கள்
அருவருப்போடும்
அவசரத்தோடும்.
அழுகி நாறும்
அந்த நாயை
நெருங்காமல்
நகர்ந்து விட்டீர்கள்
நீங்கள்!
செத்த பிறகும்
சிரித்துக் கொண்டே
இருக்கும்
துலக்காமலே
துலங்கிக் கொண்டு
இருக்கும் அதன்
பற்களை வியந்து
ரசித்துக் கொண்டு
இருக்கிறேன் நான்!
சீடர்களுக்குப்
பாடம் நடத்தியது
புத்தரின்
தத்துவப் பார்வை!
செடிகளில்
முட்களைப் பார்க்காதே
ரோஜாவைப் பார்!
பலாப் பழத்தில்
சொறியைப் பார்க்காதே
சுளைகளைப் பார்!
இதனைத்தான்...
இன்னாது அம்ம
இவ்வுலகம்
இனிய காண்க
இதன் இயல்புணர்ந்தோரே
என்கிறதோ புறநானூறு?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|