ராமராஜ்யமும் மார்க்சீயமும்
ராகுல் சாங்கிருத்தியாயன்
‘கற்காலம் போன்ற காலப் பிரிவினை ஆதாரமற்றது’ என்பது கரபாத்ரியின் கருத்தாகும். எப்போதுமே பொய் சொல்லாத நிலத்தாய். தன்னுள்ளே மறைத்து வைத்துள்ள அத்தாட்சிகளை உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும்படிச் செய்துள்ளது. அது ஆதாரமற்றதாம்! வெறும் வாய்ச் சொல் ஆதாரமுடையதாம்!
இன்னும் கேளுங்கள்! “பல கல்வெட்டுகள் கற்பனையானவையே!’’
“பெரும்பாலும் இன்று எழுதப்படும் வரலாறுகளெல்லாம் பொய்களையும், தவறான கருத்துகளையுமே கொண்டிருக்கின்றன. ஒரு பழைய நாணயம் அல்லது இடிபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சரித்திரக் கற்பனைகள் என்னும் மாளிகை எழுப்பப்படுகிறது. ‘ரிதம்பராபிரக்ஞை’ படைத்த ரிஷிகளின் வரலாறுகளே உண்மையானவை என்று சொல்லலாம். அவர்கள் சமாதி நிலையில் மூழ்கி பொருட்களைப் பார்க்கக் கூடியவர்கள்.’’
கல்வெட்டுகள், நாணயங்கள், இடிபாடுகள் ஆகியவற்றிலிருந்து கரபாத்ரி எவ்வளவு சுலபமாகத் தப்பித்துக்கொண்டு விட்டார்! உண்மை வரலாறு எவ்வளவு சுலபமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது! இந்தியாவிலுள்ள வரலாற்று வல்லுநர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலுள்ள சரித்திரப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் வீட்டு சுவாமிஜியை அடைக்கலம் புக வேண்டும். அவருடைய ‘ரிதம்பரா பிரக்ஞை’யிலிருந்து ஒரு துளிகூட கிடைத்தால் அவர்கள் ‘பிறவிப் பயனை’ அடைந்து விடுவார்கள்; பிறகு அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய அவசியமும் இருக்காது. அவர் தனது மகத்தான் நூலில் வழிகாட்டுகிறார்:
“மனிதர்களிலிருந்து வேறுபட்டவரால் கூறப்பட்ட சொற்கள் (வேதங்கள்) சுதந்திரமான பிரமாணங்களாகும் (அத்தாட்சிகளாகும்). மதம், பிரம்மம் போன்றவற்றை அங்கீகரிப்பதில் வேதங்கள் முதலியவை பிரமாணங்களாகும் (அத்தாட்சிகளாகும்)’’
“ராமாயணம், மகாபாரதம் போன்ற வைதீக சரித்திரங்களின் ஆசிரியர்களான வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நேரில் கண்டோ, நிருபர்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டோ அல்லாமல், சமாதியிலிருந்து பிறக்கும் ரிதம்பரா பிரக்ஞை’யின்படி நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொண்டு வரலாறுகள் எழுதுவதில் ஈடுபட்டனர்’’
“...ஆன்மீகவாதிகளின் பூமியும், அதன் சரித்திரமும் சில ஆயிரமோ, லட்சமோ வருடங்கள் முந்தையான அல்ல; கோடிக்கணக்கான ஆண்டுகள் முந்தையவனவாகும்... போஜர் எழுதிய ‘சமாரங்கண சூத்ரதார்’ என்னும் பழைய நூலின்படி, ராஜ் யதர் தட்சா என்பவன் அமைத்த விமானம் ஒரு விசையின் அசைவால் எண்ணூறு யோஜனங்கள் தொலைவு செல்லக்கூடியதாகும்... ராமாயணம் மகாபாரதங்களின்படி, ‘புஷ்பக விமானம்’ தற்கால விமானங்களைவிட மிகப் பெரியதும், கலையழகுடையதும், வேகமாக செல்லக் கூடியதும், ஆபத்தில்லாததுமாகும். இன்று ஜலவாயு குண்டைக் காட்டிலும் கோடி மடங்கு அதிக சக்தி படைத்த ஆயுதங்களைத் தயாரித்தாலும் அவை பழங்கால பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம் போன்ற ஆயுதங்கள் முன்னால் நிற்கமுடியாது’’
கல்வெட்டுகள், சிலைகள், இடிபாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இன்றைய வரலாற்று நூல்கள் எவ்வளவு சாரமற்றவை என்பதைக் கீழே காணுங்கள்:
“உலகத்தின் மிகப் புராதன சரித்திர நூல்கள் ராமாயணமும், மகாபாரதமுமேயாகும். அவற்றில் கூறப்பட்ட விஷயங்கள் மொகஞ்சொதாரோ. ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளில் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த வைதீக வரலாற்று நூல்களாலும் மனிதரல்லாதாரால் இயற்றப்பட்ட வேதங்கள் போன்ற சாஸ்திரங்களாலும் மனிதர்களிடையே மட்டுமல்ல, தேவர்களிலும், விலங்குளிலும், செடி கொடிகளிலும்கூட பிராமணர் முதலிய வேற்றுமைகள் சிருஷ்டி காலத்திலிருந்தே இருந்து வருகின்றன என்பது தெரிகிறது.’
மொகஞ்சொதாரோ, ஹரப்பா இடிபாடுகளில் ராமாயண-மகாபாரத வரலாறுகளை வலுப்படுத்தும் வகையில் என்ன ஆதாரங்கள் கிடைத்தனவோ, சுவாமிஜிக்கே வெளிச்சம்! அது குறித்து நமது சரித்திர வல்லுநர்களுக்கு ஒன்றும் தெரியாது.
கரபாத்ரி மேலும் கூறுகிறார்; “தற்போதைய சிருஷ்டியின் வரலாறே பல நூறு கோடி வருடங்கள் புராதனமானது (பக்கம் 527). “வேதங்கள், ராமாயணம் மகாபாரதம், புராணங்கள் ஆகியவைகளில் பல நூறு கோடி ஆண்டுகளின் வரலாறும், கணக்கற்ற யுகங்களின், கற்பங்களின், பல்வேறு சிருஷ்டிகளின் வரலாறும் இருக்கின்றன’’
இவை பொருட்களின் மனிதர்களின் சரித்திரத்தை மட்டும் தெரிவிப்பதில்லை; வைதீக வரலாறுக்கு வேறு ஒரு குறிக்கோள் உள்ளது.
“லட்சகணக்கான, கோடிக்கணக்கான வருட சரித்திரம் கடவுள் சித்தாந்தத்தைத்தான் வலியுறுத்துகிறது. கடவுள் நம்பிக்கை படைத்தோர் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். கடலின் மேல் நூறு யோஜனங்கள் நீளமான அணையைக் கடவுள் நம்பிக்கை உள்ளோர்தான் அமைத்திருக்கிறார்கள். எல்லையற்ற பூமண்டலத்தில் பேரரசை நிலைநாட்டியதும், புஷ்பக விமானத்தை அமைத்ததும் ஜலவாயு குண்டைவிட பல கோடி மடங்கு சக்தி வாய்ந்த பிரம்மாஸ்திரம், பாசுபதா ஸ்திரங்களைக் கண்டுபிடித்ததும் கடவுள் நம்பிக்கை உடையோர்தான்! மனிதர்களுடன் மட்டுமல்லாமல் தெய்வீக சக்திகளான தேவர்களுடனும், பேய்-பிசாசுகளுடனும் ஆஸ்திகர்களே தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.’’
“பரலோக ஞானம் பெற்றவர்கள் பேய்களின் உண்மை நிலையை அறிந்திருந்தார்கள்.’’
பிரம்மாஸ்திரத்தையும் பாசுபதாஸ்திரத்தையும் வீசினால் உலகில் ஒரு உயிரும் எஞ்சி இருந்திருக்காது.
3. சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் அன்னை “சமஸ்கிருதமே மிகப் புராதன மொழி என்பது நிரூபணமாகிறது.’’
“சமஸ்கிருதத்தைவிட பழைய மொழியும், வேதங்களைவிட பழைய நூலும் உலகில் கிடைக்காததால் அவையே புராதனமானவை என்பது தெளிவாகிறது. பழங்கால ‘மனு’வின் கூற்றுப்படி, சமஸ்கிருதமே மிகப் புராதன மொழியாகக் கருதப்பட வேண்டும்.
“...சமஸ்கிருதமே மூல மொழியாகும். மற்ற மொழிகள் அனைத்தும் அதன் திரிபுகளேயாகும்... ஆரிய ஸெமெடிக் மற்ற பழைய மொழிகள் எல்லாம் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை... அனைவருக்கும் மூல புருஷர் ஒருவரே என்னும் போது முதல் அறிவின் மொழியின் உருவமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
கரபாத்ரி சுவாமிஜி வேதங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் மொழியின் சிறப்பையும் எத்தனை அழகாக விவரித்துள்ளார்! இன்றைய மொழியியல் வல்லுநர்கள் கும்மிருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ‘ரிதம்பரா பிரக்ஞை இல்லையல்லவா!
4. இந்தியாவிலேயே மனிதன் படைக்கப்பட்டான்
வேதங்களின் பிறப்பிடமான பாரதத்திற்கு ஈடு இணை உலகத்தில் வேறெந்த நாடுமே இல்லை. சுவாமிஜி எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்: ஏழு தீவுகளைக்கொண்ட பூமியில் ஜம்பூ தீவு உயர்ந்தது. ஜம்பூ தீவில் கூட பாரத நாடே மிக உயர்ந்தது ...இங்கேயே எல்லா நிற மக்களும் காணப்படுகின்றனர், ஆகவே பாரதத்திலேயே மானிட சிருஷ்டி நிகழ்ந்தது.’’
“இமயமலையில் ‘மானஸ்’ என்னுமிடத்திலேயே மனிதன் படைக்கப்பட்டான். ஆசியாவின் பகுதியான இந்தியாவிலேயே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டானென்று ருசுப்படுத்தப்பட்டுள்ளது. வைவஸ்வத மனு தோன்றி இன்றைக்கு 12 கோடி 5 லட்சத்து 33 ஆயிரத்து 30 வருடங்களாகின்றன. ஆனால் உலகம் அதற்கு முன்பே படைக்கப்பட்டது. ஆகவே 195 கோடி 58 லட்சத்து 85 ஆயிரத்து 57 வருடங்களுக்குமுன் உலகம் படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.’’
தற்போது ஜம்பூதீவு என்னும் நிலவியல் கருத்து தவறானது என்று நீரூபிக்கப்பட்டு விட்டதென்பது பாவம், கரபாத்ரி அவர்களுக்குத் தெரியாது. நமது பழங்கால ஜோதிட நிபுணர்கள் பூமண்டலத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர்.
சுவாமிஜி பழைய பூகோள சாஸ்திரத்தைக் கொண்டு இமயமலையில் ‘மானஸ்’ பிரதேசத்தை முடிவு செய்தாரா அல்லது இன்றைய ‘மானஸரோவர’த்தையே ‘மானஸ் என்கிறாரா? மானஸரோவர் இந்தியாவில் இல்லை. சீனத்தின் திபேத்தில் இருக்கிறது. மனிதனைப் படைத்த பெருமை நமது நாட்டிற்கல்ல. மார்கஸிய சீனத்திற்குக் கிடைத்துவிட்டது. அப்படியென்றால், இந்தியாவிலேயே முதன் முதலில் மனிதன் படைக்கப்பட்டானென்ற வாதம் தவறென்றாகி விடுகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|