படகோட்டி
கவிஞர் பல்லவன்
படகில் வந்து
ஏறினார்
அந்தத் தத்துவவாதி!
படகு கடலில்
பயணப்பட்டது!
சமுத்திர சாஸ்திரம்
தெரியுமா உனக்கு?
படகோட்டியைப்
பார்த்துக் கேட்டார்
தத்துவவாதி.
உதட்டைப் பிதுக்கினான்
படகோட்டி.
அடடா,
உன் வாழ்க்கையில்
கால்பகுதியைப்
பாழடித்து விட்டாயே!
வருத்தப்பட்டார்
தத்துவவாதி.
மேலும் கேட்டார்
பூமி சாஸ்திரம்
தெரியுமா உனக்கு?
அது பற்றி
ஒன்றும் தெரியாது
தலையை ஆட்டினான்
படகோட்டி.
ஆக, உன் வாழ்வில்
பாதியை வீணடித்து
விட்டாய் நீ
பரிதாபப்பட்டார்
தத்துவவாதி.
வானசாஸ்திரமாவது
அறிவாயா நீ?
வித்யா கர்வத்துடன்
வினவினார் சாஸ்திரி!
அதுவும் தெரியாது
திருதிரு வென்று
விழித்தான் படகுக்காரன்!
வானத்து நட்சத்திரங்களைக்
கண்டுகொண்டுதானே
நீ கடலில்
வழிகண்டு செல்ல
முடியும்?
வானசாஸ்திரமும்
கற்காமல் இருக்கிறாயே?
கிட்டதட்ட
உன் வாழ்வில்
முக்கால் பங்கை
விரயமாக்கி விட்டாய்
நீ!
இரக்கப்பட்டு,
இதயம் நொந்தார்
சாஸ்திரி.
அப்பொழுது
கடல் குமுறிக்
கொந்தளித்தது!
சினந்து சீறிப்
புயலடித்தது!
உங்களுக்கு
நீச்சல் தெரியுமா
சாமி?
பரிவுடன் கேட்டான்
படகோட்டி.
நீச்சல் என்றால்
என்னவென்றே
எனக்குத் தெரியாதே!
பயவுணர்வு மீதூரச்
சொன்னார் சாஸ்திரி.
அப்போது
புயல் படகைப்
புரட்டிப் போடப்
பார்த்தது!
பதற்றப்படாமல்
படகோட்டி
சொன்னான்.
சாமி! உங்கள்
முழு வாழ்வையும்
இப்பொழுது
கடல் விழுங்கி
ஏப்பம்விடப் போகிறது!
கடல், வானம்
பூமி பற்றிய
சாஸ்திரங்களை
நீங்கள்
கரைத்துக் குடித்து
என்ன பயன்?
நீந்தக் கற்காமல்
போனீர்களே!
திகிலுற்றுக் கதறினார்
தத்துவவாதி!
ஆனால்
அவரைக் கரைசேர்க்கக்
கற்றிருந்தான்
படகோட்டி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|