Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2007

ஞாநி எந்தப் பக்கத்தில்?

ஆனாரூனா

“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!

இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்டும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com