தாமரையின் தத்துவ தரிசனம்
இளவேனில்
திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு சார்ந்த நிலையில் புகழ் பெற்றிருந்தாலும் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான உடல் நலனை வழங்குகிறது. மலையை வலம் வருவதால் ஒருமுகச் சிந்தனை வளர்கிறது. நடப்பதனால் உடல் உறுப்புகள் சீராக இயங்குகின்றன. இயற்கை மருத்துவப் பொருட்கள் நோயற்ற நல்வாழ்வை வழங்கத் துணை நிற்கின்றன. ஆன்மிகத்தை மனித சமுதாயம் வளம்பெறப் பயன்படுத்த வேண்டும் என்னும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கிரிவலம் அமைதியாக உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. அதன் பலன்களை அனைவரும் பெறவேண்டும்.
- தாமரை, அக். 2006
இவ்வாறு மத நம்பிக்கைக்கு விஞ்ஞான விளக்கம் தருகிறது `தாமரை’. இனிமேல் வர்க்கப் போராட்டங்கள் இல்லாமல் பிரார்த்தனையின் மூலமே சோசலிசம் வரும் என்றும் சொல்லலாம்.
தமிழக சட்டப்பேரவையை உடனே கூட்டுக: ராமதாஸ்
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கைக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமலும் அதை எதிர்த்தும் சண்டித்தனம் செய்தது முந்தைய கேரள காங்கிரஸ் அரசு. மாநிலத்தில் உள்ள அணைகளை எல்லாம் ஓர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் அனுமதியில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியது.
இந்நிலையில் ஆட்சி மாறி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு அங்கே பதவிக்கு வந்தது. இவர்களாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீரூபிக்கும் வகையில் அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு நடந்து கொள்கிறது. அவர்களே பரவாயில்லை என்று கருத வைத்து விடுவார்களோ என்ற அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில்தான் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் பேச்சு வார்த்தை என்ற ஒரு கபட நாடகத்தை கேரள அரசு அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தையும் நம்பவைத்திருக்கிறது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்று அறிவுரை கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. முதலில் உத்தரவை அமல்படுத்துங்கள் என்று உத்தரவிட வேண்டிய உச்ச நீதிமன்றம் மீண்டும் பேச்சுவார்த்தை என்று புதிதாக அறிவுரை வழங்கியிருப்பது சரிதானா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மாநில அரசுகளே பகிரங்கமாக அறிவிப்பதும், நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அத்துடன் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு முறையை ஏற்படுத்துவது குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த உத்தரவை மதித்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதையும் நீதிமன்றத்தை மதிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிலை நாட்டவேண்டும்.
இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்ற நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியவில்லை என்ற நிலையில்தான் மூன்றாவது நபர் என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். என்ற நிலையை பகிரங்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து அவசரமாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|