வாளாக நீ!
கவிஞர் பல்லவன்
தீட்டி வைத்த
நிழலோவியமாய்
தீப்பிடித்த காகிதமாய்க்
கறுத்த மேனி!
திமிர்ந்து நிமிர்ந்த
திண்தோள்கள்!
உருக்கி வார்த்த
கரும்பொன் கட்டுடல்!
உடைப்பெடுத்த
ஓடையாய்
வியர்வை வெந்நீரில்
குளிக்கும் விக்கிரகமாய்
இரும்படித்துக்
கொண்டிருந்தான்
அவன்!
ஊதுலைக் காற்றாலும்
உஷ்ணப் பெருமூச்சாலும்
சீறிச் சினந்து
கொண்டிருந்தது
உலைத் தீ!
உயிர்வாழ
ஓயாமல் போராடும்
அந்த
உழைப்பாளியின்
வாழ்க்கையில்
வெளிச்சம் இல்லை!
வெப்பமே இருக்கிறது!
அவனது
நெஞ்சில் வயிற்றில்
கொதித்தது
நெருப்புலை!
நாள்தோறும்
அந்தக்
கொல்லுப் பட்டறையில்
நெருப்பெரிந்தால்தான்
அவனது குடிசையில்
அடுப்பெரியும்!
அவனது
சம்மட்டி அடிகளை
வாங்கி வாங்கி
இரும்புச் சட்டங்கள்
வாளாவது உண்டு!
அவன்மீது
வறுமையைத்
திணித்தவர்கள்
முன் அவன்
வாளாகப் போவது
என்று?
அன்றுதான்
அவனது வறுமை
தலைதெறிக்க
ஓடும்!
வாழ்வில் எல்லாம்
கைகூடும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|