பாத்திரப் படைப்பாளி
கவிஞர் பல்லவன்
இப்பூமியின்
சக்கரச் சுழற்சி
புதுப் புது
பாத்திரங்களை
வனைந்தளித்துக்
கொண்டே
இருக்கிறது
ஒரு குயவனின்
சக்கரச் சுழற்சி
மண் பாத்திரங்களைப்
படைத்தளிப்பது போல!
சுதந்திர இந்தியாவில்
இன்றும் எங்கள்
மண்பாண்டத் தொழிலாளி
கோமணத்தோடேயே
தரிசனம் தருகிறான்!
இவனது கைகளில்
ஆணைச் சக்கரம்!
ஆளுயரச் செங்கோல்!
வயிற்றில் மட்டும்
வறுமைக் கோடுகள்!
களிமண்தான்
இவனுக்கு மூலதனம்!
கடும் உழைப்பாளி
இவன்
வறுமை இனம்!
மண்ணில் இத்தனை
வடிவங்களா? இவன்
மனதில் இத்தனை
உருவங்களா?
எண்ணிடத் தோன்றும்
நமக்கு! இவனது
கைவினைப் பொருளைக்
காணும் பொழுதெல்லாம்!
வேகமாகச் சுழலும்
சக்கரத்திலிருந்து
அந்தப்
பச்சைமட் கலத்தை
இலாவகமாய்
இவன் கையேந்துவான்
தாயேந்தும்
குழந்தையைப் போல.
அக்னிப் பிரவேசம்
செய்த பின்பே
இவனது படைப்புகள்
ஏற்கப்படுகின்றன.
தட்டிப் பார்த்த
பிறகே
இவன் சிருஷ்டியின்
தரம் அறியப்படுகிறது.
இவனது படைப்புகள்
எப்போதும்
நிலையாமையைப்
பற்றியே
பேசிக் கொண்டு
இருக்கின்றன.
இப்பிரபஞ்சத்தின்
காலப் பழமையைக்
கணக்கிட இவனது
பானை ஓடுகளே
பயன்படுகின்றன.
இவனது காலடிகளில்
மிதியுண்ட களிமண்தான்
கலயங்களாகி
இவனைத் தண்டித்துப்
பழிவாங்கி விடுகிறது
தலைசுமக்க வைத்து!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|