போரே நீ போ
இளவேனில்
கால காலமாக மனிதகுலத்தைப் பீடித்துள்ள பீடை யுத்தங்கள். சென்ற 5,500 ஆண்டுகளில், உலகில் 292 ஆண்டுகளே அமைதி நிலவிற்று என்று சுவிட்சர்லாந்து நாட்டு அறிஞர் ஜீன் ஜேக்குவஸ் பேபல் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல; வரலாற்றில் நடைபெற்ற ஏறக்குறைய 15,000 போர்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஐரோப்பாவிலேயே நடந்துள்ளன என்றும் அவர் கணக்கிட்டுள்ளார். 17-வது நூற்றாண்டில், அந்தக் கண்டத்தில் 30 லட்சம் பேர் செத்து மடிந்தனர்; 18-வது நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், 19-வது நூற்றாண்டில் 90 லட்சம் பேரும் யுத்தப் பெருந்தீயில் வெந்து மாண்டனர்.
20ஆம் நூற்றாண்டு ஒன்றும் சோடைபோகவில்லை. முதலாவது உலக யுத்தத்தில் ஒரு கோடிப் பேரும், இரண்டாவது உலக யுத்தத்தில் 5.5 கோடிப் பேரும் உயிரிழந்தனர். சென்ற யுத்தத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை உங்களுக்கு மலைப்பாகயிருக்கலாம். ஆனால், மற்றோர் யுத்தம் வந்தால் மனித குலம் அடையும் நாசத்தை எண்ணினால் சென்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. புராதன யுத்தங்களில் ஈட்டிகளும், கத்திகளும் ஆயுதங்களெனப் பயன்படுத்தப்பட்டன. போரிடுவோர் ஒவ்வொரு எதிரி வீரனையும் தனித்தனியே கொல்ல வேண்டும்.
வில்லிலிருந்து பாயும் ஓர் அம்பு ஒரு வீரனையே அந்த நாளில் கொல்ல முடிந்தது. ஹனிபால் என்ற போர்வீரன் பயன்படுத்திய யானைகள் சில நூறு ரோமானியர்களைத் தங்களது காலடியில் மிதித்துக் கொன்றன. பின்னர், வெடிமருந்து கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், கொலைக் கருவிகள் நவீனமடைந்தன. இத்தனை பேரைக் கொல்ல இத்தனை குண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது நவீன கணக்கிடுதலாயிற்று. நூறாயிரக்கணக்கான பிரஜைகளையும், நகரங்களையும் விமானங்களிலிருந்தே தவிடு பொடியாக்கும் ராட்சத ஆயுதங்கள் இன்று உருவாகியுள்ளன.
இங்கு ஒரு சுவையான விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். யுத்தம் நடைபெற்றால் போர் வீரர்களே அதிகமாக உயிரிழப்பர் என்றும், வீடுகளிலமர்ந்து யுத்தச் செய்திகளை ரேடியோவில் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்தில்லை என்றும் நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு.
1870-1871 பிரான்கோ - ஜெர்மன் யுத்தத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு நூறு பேரிலும் 98 பேர் போர் வீரர்கள். இருவர் சாதாரணப் பிரஜைகள். ஆனால், முதல் உலகப் போரில் இந்த வீதாசாரம் மாறியது. கொல்லப்பட்ட நூறு பேரில் 52 பேர் போர் வீரர்கள். 48 பேர் சாதாரணப் பிரஜைகள். இரண்டாவது உலக யுத்தத்திலோ இது மேலும் தலைகீழாக மாற்றமடைந்தது. கொல்லப்பட்ட ஒவ்வொரு 24 போர் வீரர்களுக்கும் 76 பிரஜைகள் மரணமடைந்தனர். வியத்நாம் யுத்தத்தில் ஒவ்வொர் 100 பேரிலும், 98 பிரஜைகளும், 2 போர் வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த மாற்றமானது ஆயுதங்களின் கொல்லும் திறனைப் பொறுத்து மாறியுள்ளது. இந்த ரீதியில் சென்றால், மூன்றாவது உலக யுத்தத்தில் என்னதான் மிஞ்சும் என்பதை நீங்களே கற்பனை
செய்து கொள்ளலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|