தண்ணீரில் ஓர் லட்சியவாதி
கவிஞர் பல்லவன்
நீர் நீப்பின்
உயிர் வாழா
மானப் பிறவி நீ!
நீரோட்டப்
போக்கிலேயே
போகாமல்
போராட்ட உணர்வுடனேயே
நீ வாழ்கிறாய்!
எதிர் நீச்சலே
உனது வாழ்க்கை!
யானையை
உருட்டிவிடும்
நதிக்கோபம்
உன் போர்க்குணத்திடம்
தோற்கிறது!
இதனால்தான்
இலட்சியவாதிகளின்
இதயங்களில் எல்லாம்
நீ நீந்திக் கொண்டே
இருக்கிறாய்!
அழுக்கையே
உணவாக ஏற்றுக்
கொண்டு
தண்ணீரைச்
சுத்திகரிக்கும்
தூங்காத தொழிலாளி
நீ!
சுயநலத்தோடு கூடிய
உனது பொதுநலம்
எங்கள்
அரசியல்வாதிகளுக்குப்
பாடம் புகட்டாதோ?
இருக்கும் இடத்தை
அவரவர்
சீர்திருத்தினாலே
போதும்
உலகம் திருந்திவிடும்
என்பதுதான் உனது
இலக்கண விளக்கமோ?
பாற்கடலில் உன்னை
வாழவைத்தாலும்
அழுக்கே உனக்கு
ஆகாரம்!
வாழத் தெரியாத
பிறவி என்று
இந்த வையகம்
உன்னை ஏசும்!
உப்புக் கடலில்
வாழ்ந்தாலும்
நீ
உப்பை ஏற்பதில்லை!
இந்த
மீன்ஞானத்தின்
முன் மற்றவை
வீண்ஞானம் தானே?
இருபத்து நான்கு
மணிநேரமும்
குளித்தபடி இருக்கும்
நீ
நாற்றம் இழப்பதில்லையே
அது ஏன்?
வாயைத் திறந்து
கொண்டே
எதற்கு அலைகிறாய்?
உன்னிடம்
இருக்கும் முள்
போதாது என்று
ஒரு
தூண்டில் முள்ளுக்கு
ஆசைப் பட்டல்லவா
தூக்கில் துடிதுடிக்கிறாய்!
தூண்டில் காரன்
நெஞ்சில் ஓர் முள்
நியாயம் கேட்கிறதே
அது எப்படி?
அடக்கமே உயிர் காக்கும்
துள்ளிக் குதிக்காதே
மீனே!
அதோ வேட்டையாட
வருகிறது
கொக்கு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|