தஞ்சை பெரிய கோயிலிலிருந்து சரபோஜி கும்பலை வெளியேற்று
இளவேனில்
தஞ்சையில் மராத்திய ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் வெங்கோஜி என்கிற ஏகோஜி. இவர் அப்போது தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர் என்ற மன்னருக்குக் கூலிக்கு உதவி செய்ய பீஜப்பூர் பகுதியிலிருந்து படையுடன் வந்த மராத்தியத் தளபதி. இவர் துரோகம் செய்து விஜயராகவ நாயக்கரைக் கொன்று தஞ்சை ஆட்சியை 1765 பிப்ரவரியில் கைப்பற்றினார்.
இவ்வாறு துரோக வழியில் உருவான மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி என்பவர் 1798-இல் தஞ்சை அரசரானார். அமர சிம்மன் என்ற மராட்டிய அரசன் வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி கோரிய அளவிற்கு வரி தர மறுத்ததால், அமர சிம்மனை வீழ்த்தி விட்டு, அரசபரம்பரயைச் சேராத மேற்படி சரபோஜியை வெள்ளையர்கள் மன்னராக்கினர். இந்த சரபோஜி ஓராண்டு மட்டுமே ஆண்டு விட்டுத் தஞ்சை மண்டலத்தை 1799-இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு லட்சம் பகோடாவுக்கு விற்று விட்டார்.
அப்போது அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளரான வெள்ளை அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு சீட்டை வைத்துக் கொண்டு, தஞ்சைப் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 110 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக மராத்திய ஆக்கிரமிப்பாளர்கள் பதவி பெற்று வருகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுவது சட்டப்படியும், வரலாற்று உரிமைப்படியும் செல்லாது.
1. சரபோஜி தஞ்சையை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விற்று விட்டபிறகு தஞ்சையின் மீது சரபோஜிக்கோ அவரது வாரிசுகளுக்கோ எந்த உரிமையும் கிடையாது.
2. விடுதலை பெற்ற இந்தியாவில் தஞ்சை மராத்திய மன்னர் என்ற பெயரில் யாரும் மன்னர் மானியம் வாங்கியதில்லை.
3. 1947 ஆகஸ்ட் 15-க்கு முன் வெள்ளையர் ஆட்சியில் தஞ்சை மராத்திய சமஸ்தானம் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டுமே வெள்ளையர் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
4. சரபோஜியின் மகன் சிவாஜிக்கு வாரிசு யாரும் இல்லை. எனவே, இப்பொழுது தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலராக உள்ள பாபாஜி ராஜா பான்ஸ்லே என்பவர் மேற்கண்ட சரபோஜிக்கோ அவர் மகன் சிவாஜிக்கோ சட்டப்பூர்வ வாரிசு அல்லர். வரலாற்று உண்மைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பாகவே ராஜா பான்ஸ்லே என்பவர் இளவரசர் என்றும், பெரிய கோயில் பரம்பரை அறங்காவலர் என்றும் சொல்லிக் கொள்கிறார்.
5. சரபோஜி மன்னர் தஞ்சையில் இருந்தபோது, தென்பாண்டிச் சீமையிலே ஆங்கிலேய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து வீரச்சமர்புரிந்த தமிழ் மன்னர்களான மருது சகோதரர்களைப் பிடிக்க, வெள்ளையர்களுக்கு ஆதரவாக படையும், பணமும் அனுப்பி வைத்தார். தமிழ் இனத்திற்குச் செய்த இந்தத் துரோகத்தை கர்வத்தோடு தஞ்சைப் பெரியக் கோயில் கல்வெட்டில் மராத்தியில் எழுதி வைத்து தமது புகழ் பாடியுள்ளார் சரபோஜி.
6. தமிழ்ப்பேரரசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் இப்போதைய பான்ஸ்லே தமது அறங்காவலர் பதவியைப் பயன்படுத்தி இராச இராச சோழனின் நோக்கத்திற்கு மாறாக புதிய புதிய வட நாட்டு தெய்வச் சடங்குகளைப் புகுத்தி தமிழ் ஆன்மீகச் சடங்குகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்.
7. தஞ்சைப் பெரிய கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் கிடைக்கும் மிகப்பெரும் வருமானம் ராஜா பான்ஸ்லேயின் பெயரில்தான் வங்கியில் போடப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.10,000/- சிறப்பு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறையில் பெரியகோயில் இருந்தபோதிலும் பரம்பரை அறங்காவலர் என்ற பெயரில் பான்ஸ்லேதான் முழு அதிகாரத்தையும் வைத்துள்ளார். மேற்படி வருமானங்களைக் கல்வி வளர்ச்சிக்கோ, ஏழைகளுக்கு உதவவோ அவர் பயன்படுத்துவதில்லை.
மேற்கண்ட காரணங்களைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட அனைத்து அரண்மனைக் கோயில்களுக்கும் மராத்திய பாபாஜி ராஜா பான்ஸ்லே பரம்பரை அறங்காவலராகத் தொடர்வதைத் தடைச் செய்ய வேண்டும் என்றும் தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட அரண்மனைக் கோயில்கள் அனைத்தையும் முழுமையாக தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
தமிழ்ப்பேரரசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு மராத்திய ஆக்கிரமிப்பாளர் பரம்பரை அறங்காவலர் என்ற இழிவை நீக்க வேண்டும். தஞ்சையை வஞ்சகத்தால் ஆக்கிரமித்த மராத்திய இனத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலர்களாகத் தொடர்வது தமிழ் இனத்தையும் அத்தமிழ்ப் பேரரசனையும் இழிவு படுத்துவதாக உள்ளது.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு
தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோயிலுக்குப் பரம்பரை அறங்காவலராக; மராத்தியர் தொடர்ந்து நீடிப்பது தமிழர்களின் மொழிவாரி மாநில உரிமைக்கு எதிரான செயல். அத்துடன் தமிழ் இனத்தை அவமதிப்பதாக உள்ளது. இந்த இழிவை அகற்றுவது பற்றி முயற்சிகள் எடுப்பதற்காக தஞ்சையில் 16-12-2005 அன்று 18 பேர் கொண்ட தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மேலும் விரிவுபடுத்தப்படும். இக்குழுவிற்கு நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுவர். இக்குழுவின் விரிவடைந்த கூட்டம் 12-03-2006 ஞாயிறு மாலை 4 மணிக்குத் தஞ்சை நகரம் மேம்பாலம் ராணி பேரடைஸ் திரையரங்கம் எதிரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. எதிர்கால செயல்பாடுகள் பற்றி இக்கூட்டத்தில் கலந்தாய்வு செய்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|