சாத்தியமானதே சத்தியம்
ஆனாரூனா
குஜராத்தில் சங்கப் பரிவாரங்கள் நடத்திய கொலை தீவைப்பு சம்பவங்களின் போது ‘பெஸ்ட் பேக்கரி' என்ற நிறுவனத்தில் பல ஊழியர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்தக் கோரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஜாகிரா ஷேக் என்ற பெண்மணி பெஸ்ட் பேக்கரி எரிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டார்.
முதலில் நடந்ததை நடந்தவாறே நீதிமன்றத்தில் கூறிய ஜாகிரா பிறகு தனது முந்திய சாட்சியத்தை மறுத்துக் கூறினார். பாரதீய ஜனதாக் கட்சியினரின் மிரட்டலால் உயிருக்குப் பயந்தே அவர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறினார் என்பது இந்தியா முழுவதும் பகிரங்கமான உண்மை. ஆனால் ஜாகிரா முன்னுக்குப் பின் முரணாகச் சாட்சியம் அளித்ததால் குற்றவாளிகள் தப்பித்துவிட்டதாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
ஜாகிராவுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. நடப்பது நரேந்திர மோடி அரசு. காக்கி ரௌடிகளும் காவி ரௌடிகளும் ஒன்று திரண்டு மிரட்டும் போது ஒரு நீதிபதியால் கூட உண்மையைக் கூறிவிட முடியாது. இந்த நிலையில் ஒரு பெண் ஒரு பாசிச அரசையும் அது வளர்த்துவிட்ட பயங்கரவாதக் கும்பலையும் எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
நீதிமன்றம் உண்மையை வெளிக்கொணர்வதிலும் குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதிலும் உறுதியுடன் நிற்குமானால் நரேந்திர மோடியோ, பா.ஜ.கவோ குஜராத்தில் பதவியில் இருக்கும் வரை உண்மை வெளிவரமுடியாது என்று கருதுவதால் அந்த அரசு உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். குஜராத் அரசு நீக்கப்பட்ட பிறகு அச்சமற்ற நிலையில் பல உண்மைகள் அம்பலமாகியிருக்கும். பல குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் நடக்கவில்லையே ஏன்?
சிங்கங்களை யாரும் பலியிடுவதில்லை. சாதுவான ஆடு கோழிகளே பலியிடப்படுகின்றன.
இவர் படத்திற்கு இங்கென்ன வேலை?
சிலருடைய படம் அஞ்சல் தலையில் இடம் பெறும்; சிலருடைய படம் அஞ்சல் அலுவலகத்தில் இடம் பெறும் என்று வேடிக்கையாய்ச் சொல்வார்கள். அஞ்சல் தலையில் படமாகிறவர் சாதனையாளர், மக்களுக்கு அல்லது அரசாங்கத்துக்குச் சேவை செய்தவர் என்று புரிந்து கொள்ளலாம். அஞ்சல் அலுவலகத்தில் படமாக இடம் பெறுகிறவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி (முனு) என்று புரிந்து கொள்ளலாம்.
குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள் கூட அஞ்சல் அலுவலகத்தில் இருக்கின்றனவே என்று குதர்க்கமாகக் கேட்டால், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று யார் சொன்னது என்றும் மக்கள் குதர்க்கமாகச் சொல்வார்கள். மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இப்போது பலருடைய படங்களை அஞ்சல் தலையில் பதிப்பித்து அவர்களை கௌரவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியதுதான். அதே சமயம் அவசரத்தில் அஞ்சல் அலுவலகத்தில் இடம் பெற வேண்டியவர்களின் படங்கள் அஞ்சல் தலையில் வந்துவிடக் கூடாது.
சில வாரங்களுக்கு முன் நடிகர் ஜெமினி கணேசனின் படத்துடன் ஒரு அஞ்சல் தலை வெளியிட்டார். ‘இது என்ன கூத்து?’ என்று பலரும் திகைத்துப் போனார்கள். இவருடைய படத்தை எதற்கு அஞ்சல் தலையில் வெளியிட்டார்கள்?
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|