இட்லரும் புஷ்ட்லரும்
ஆனாரூனா
1939, ஆகஸ்ட் 31ஆம் நாள். வெது வெதுப்பான கோடைக்காலத்து மாலை நேரம்.
போலந்து ராணுவ உடையணிந்த சில சில ஜெர்மானிய நாஜிகள், ஜெர்மன் எல்லை நகரமான கிளெய் விட்ஜில் உள்ள வானொலி நிலையத்தை மின்னல் வேகத்தில் கைப்பற்றிக் கொள்கிறார்கள். போலந்து ராணுவ உடையில் இருக்கும் நாஜி வீரன் ஒருவன் வானொலி நிலைய ஒலிபெருக்கி முன் தோன்றிப் பேசுகிறான். “ஜெர்மனிக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. போலந்துப் படை ஜெர்மனிக்குள் நுழைந்து விட்டது. வெல்க போலந்து. ஒழிக ஜெர்மனி!’’
ஜெர்மனியின் நாஜியே போலந்து ராணுவ வீரனைப் போல் பேசிக் கொண்டிருக்கையில் இந்த நாடகத்தின் மற்றொரு காட்சியாக இதர நாஜிகள் போர் முழக்கங்களுடன் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். ஜெர்மனி மீது போலந்து போர் தொடுத்து விட்டதாக ஜெர்மனி வானொலி மூலம் ஜெர்மானிய ராணுவத்தினரே திறமையாக அந்த நாடகத்தை நடத்துகிறார்கள். இந்த ஒலிபரப்பு ஏழு நிமிடங்கள் நீடிக்கிறது. பிறகு ஒலிபரப்பு நின்று விடுகிறது. தம் நாட்டின்மீது போலந்து படையெடுத்து ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டதாக ஜெர்மானிய மக்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் கொள்கிறார்கள்.
போலந்து மீது தாக்குதல் தொடங்குவதற்கான காரணம் கிடைத்துவிட்டது ஜெர்மனிக்கு. இந்த நாடகம் நடந்த சிலமணி நேரத்துக்குப் பிறகு - அதாவது செப்டம்பர் ஒன்றாம் நாள் அதிகாலை 4.40 மணிக்கு சிச்லெஸ்விக் - ஹோல்ஸ்டீன் எனும் ஜெர்மன் போர்க் கப்பல் வெஸ்டர்பிளேட் எனும் போலந்து கடற்கரைக் கோட்டை மீது திடீரென்று பீரங்கிகளால் சுடுகிறது. அதே நேரம் அந்தக் கப்பலிலிருந்து 4000 படை வீரர்கள் தரை இறங்குகிறார்கள். ஜெர்மன் படைகள் போலந்தின் எல்லைகளுக்குள் நுழைகின்றன.
இதில் வேதனையூட்டும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் கப்பல்தான் ஏழு நாட்களுக்குமுன் போலந்தின் டான்ஜிக் துறைமுகத்தில் ‘போலந்து - ஜெர்மன் நட்புறவு நீடூழி வாழ்க’ என்கிற பதாகையுடன் நங்கூரமிட்டிருந்தது.
அந்தக் கப்பலிலிருந்து தான் நாலாயிரம் போர்வீரர்கள், அமைதி தவழும் போலந்து நாட்டின் ஆழ் துயில் கொண்டிருந்த நகரங்கள் மீதும் கிராமங்கள் மீதும் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தார்கள். இவ்வாறுதான் இரண்டாம் உலகப் போரின் முதல் நாள் தொடங்கியது.
அன்று இட்லர் நடத்திய நாடகத்தைத்தான் ஈராக்கில் அமெரிக்க இட்லர் புஷ் நடத்தினார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. ஈராக்கில் சதாம் உசேன் மிக மோசமான பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனுக்குத் தகவல் தருகிறது. மற்றுமொரு உலகப் போர் தொடங்குவதற்கு ஈராக் நடத்தும் ரகசியத் திட்டம் குறித்து அமெரிக்க செனட் (நாடாளுமன்றம்) கவலை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரப்பப்படுகிறது. அமெரிக்கப் பொம்மையாகிவிட்ட ஐ.நா. மன்றம், ஈராக்கில் சோதனை போட வேண்டும் என்று அமெரிக்காவின் குரலை எதிரொலிக்கிறது.
சதாம் உசேன் எவ்வளவு தான் உண்மை நிலையை அறிவித்தாலும் ரசாயன ஆயுதங் கிடங்குகள் இரகசியமாய் ஈராக்கில் இயங்குவதாக உலகமக்களை நம்ப வைக்கிறது அமெரிக்கா. யோக்கியர் டோனி பிளேரும் வேறு சில நாடுகளின் தலைவர்களும் புஷ்ஷின் ஒப்பாரிக்கு உரமூட்டுகிறார்கள். உலகமக்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி அமெரிக்க ஆதரவுப் படைகள் ஈராக்கில் நுழைந்து குண்டு மாரி பொழிந்தன. அன்று மூண்ட நெருப்பு இன்று வரை ஈராக்கில் அணையவே இல்லை.
ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் ஈராக்கில் அமெரிக்கா புளுகியது போல எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை. அரபுநாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கில் எந்தவிதமான இழிந்த காரியத்தைச் செய்யவும் அமெரிக்கா தயங்காது என்பதை நேர்மையுணர்ச்சியுள்ள அனைத்து மக்களும் அம்பலப்படுத்தினார்கள். அப்போதும் ஈராக்கை விட்டு வெளியேறத் தயாராக இல்லை அமெரிக்க ராணுவம்.
உலகெங்கும் அமெரிக்கப் போர்வெறிக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. வெட்கப்படவில்லை புஷ்! உலகத்தின் கவனத்தைத் திருப்புவதற்காக மற்றொரு நாடகம் அரங்கேறுகிறது. அமெரிக்க வர்த்தக கோபுரங்களை இரண்டு விமானங்கள் தாக்கித் தகர்க்கின்றன. அதை உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுகிறது அமெரிக்கா. அதேநேரம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் விமானத் தாக்குதல் நடைபெறுகிறது.
பின்லேடனின் பயங்கரவாத இயக்கம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உலகை நம்ப வைத்தது அமெரிக்கா. இப்போது வர்த்தக மையம் தாக்கப்பட்டதும், பென்டகன் தாக்கப்பட்டதும் கூட அமெரிக்க நாடகமே என்று அமெரிக்க ஏடுகளே அம்பலப்படுத்துகின்றன. ஆனால் ‘புஷ்-ட்லர்’ இன்று வரையிலும் பயங்கரவாதத்துக்கு எதிராக தனது தலைமையின் கீழ் உலக நாடுகள் வரவேண்டும் என்று சமாதானத் தேவ தூதனாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக ‘புஷ்-ட்லரும்’ மன்மோகனும் இணைந்து செயல்படப்போகிறார்களாம். இந்திய அமைதிக்கு இதை விட வேறு என்ன ஆபத்து வரவேண்டும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|