கம்பளிக் கரடி!
கவிஞர் பல்லவன்
கரைபுரண்டது
புதுவெள்ளம்
ஆற்றில்!
அதன் வெள்ளப் பெருக்கை
பார்த்தபடி
நின்றனர் இருவர்.
கம்பளிப் போர்வை
ஒன்று நீரில்
மிதந்து வருவதைக்
கண்டனர் இருவரும்!
நீந்தத் தெரிந்த
ஒருவன்
சடேரெனப் பாய்ந்தான்
வெள்ளத்தில்.
எதிர்நீச்சல்
இட்டவாறே
கம்பளி அருகிலும்
போய்விட்டான்!
நெடு நேரமாகியும்
கம்பளியுடன்
கரைதிரும்ப
முடியவில்லை
அவனால்!
வெள்ளம்
இழுத்துச் செல்கிறது
அவனை.
"ஆபத்து! ஆபத்து!''
அலறுகிறான் அவன்.
"கம்பளியை
விட்டுவிடு!
கரைக்குத்
திரும்பிவிடு!''
கத்தினான்
கரையில் நிற்பவன்.
"விட்டு விலகிக்
கரைக்குத்
திரும்பத்தான்
போராடுகிறேன்.
என்னை அது
விடமாட்டேன்
என்கிறதே!
கம்பளி இல்லையடா
அது!
ஆற்று வெள்ளம்
அடித்து வரும்
கரடி!''
பெருங்குரலெடுத்துப்
புலம்பினான்
கம்பளி விரும்பி!
ஆற்றோரமாகவே
ஓடிவரும்
அவனது நண்பன்
கரைமீது
பெரிய மரம் ஒன்றைக்
கண்டான்.
அம்மரமோ
நதியில் கிளை
தாழ்த்திப்
படுத்திருந்தது.
அங்கே வந்த
முதியவர் ஒருவரும்
அவனுக்கு உதவினார்!
நதிப்போக்கில்
மரத்தின் அருகில்
வந்த கம்பளிவிரும்பியைக்
கைகொடுத்துத் தூக்கிக்
கரடிக்கு ஒரு
உதை கொடுத்தான் நண்பன்!
மரணத்தின்
பிடியிலிருந்து
காப்பாற்றப்பட்டான்
கம்பளி விரும்பி.
அங்கே இருந்த
முதியவர் பேசினார் :
"தீயப்பழக்கம்
என்பதுகூட
இப்படித்தான்
ஆசைகாட்டி நம்மை
அழைக்கும்!
அதன் இழுப்புக்கு
நாம் இணங்கிவிட்டால்
போதும்
படுகுழியில் தள்ளிவிடும்
நம்மை!
தீயப்பழக்கத்தை
விட்டுவிட்டு
வந்து விடலாம்
என்றாலோ
அது ஒருபோதும்
நம்மை விட்டுவிடாது!
கம்பளிக்கு
ஆசைபட்டுக்
கரடியிடம்
பிடிபட்ட கதிதான்
நமக்கு!
ஒரேயடியாக
ஒரே நாளில்
தீயப்பழக்கங்களைத்
தூர வீசி விடவும்
முடியாது.
அப்பழக்கங்களுடன்
படிப்படியாக
இறங்கி வந்துதான்
அவற்றைப்
பள்ளத்தில் தள்ளி
மூடவேண்டும்!''
முதியவர் விளக்கம்
புத்திக் கொள்முதலானது
இருவருக்கும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|