தமிழன் கால்வாய் சில செய்திகள்
உலகில் முதன்முதலில் பாலம் கட்டப்பட்டது எத்தனை ஆண்டுகளுக்கு முன்?
ஒரு கால்வாய், ஒரு சாலை, ஒரு ரயில்பாதை அல்லது ஒரு பள்ளத்தாக்கு போன்ற தடைகளைத் தாண்டி சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் கையாளத் தேவையான ஒரு கட்டமைப்பே பாலம் என்பது. சாலை, ரயில் போக்குவரத்து அல்லது ஒரு குழாயின் மூலம் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை ஒரு கால்வாய் அல்லது ஒரு பள்ளத்தாக்கினைத் தாண்டிக்கொண்டு செல்லும்போது பாலம் என்னும் இக்கட்டமைப்பினை மேம்பாலம் என்று அழைக்கிறோம். வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள ஒரு பகுதியின் சாலையின் மேல் கட்டப்படும் மேம்பாலமும் ஒருவகைப் பாலமே; அதனால் பாலத்தின் கீழ் இயங்கும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கும்.
உலகில்: எகிப்து நாட்டில் நைல் நதிக்குக் குறுக்கே கட்டப்பட்ட வளைவுப் பாலம் கி.மு.2650 ஆவணப்படி முதன்முதலாக மெனிஸ் மன்னரால் கட்டப்பட்ட பாலம்
ஆசியாவில்: பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் - சோ பாலம் (சீனா) கி.பி.600 நீளம் - 37.6 மீட்டர் உயரம் - 7.2 மீட்டர், சாலை அகலம் : 9 மீ
இந்தியாவில்: அய்தராபாத்தில் முசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராணா புல் பாலம்தான் மிகப் பழமையான இந்தியப் பாலம்
ஆதாம் பாலத்தின் வரலாற்றுப் பின்னணி:
1804ஆம் ஆண்டில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் சர்வேயர் ஜெனரலாக இருந்த ஜேம்ஸ் ரேனல் என்பவரால் முதன்முதலாக இது ஆதாம் பாலம் என்று அழைக்கப்பட்டது.
இங்குள்ள மணல்திட்டுகள் ஈரப்பசையற்று வறண்டிருக்கின்றன; எந்த இடத்திலும் இந்த மணல்திட்டுகள் 4 அடிக்கு மேல் (1 மீட்டர்) நீருக்குள் அமிழ்ந்திருக்கவில்லை. தற்போது கைவிடப்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் 1838ஆம் ஆண்டு காலத்திலேயே தொடங்கப்பட்டன. ஆனால், சிறிய மரக்கலங்கள் தவிர பெரிய கப்பல்கள் செல்வதற்கேற்ற கால்வாயை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. முன்னாட்களில் இந்தியாவும் இலங்கையும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை ஆதம்பாலம் காட்டுகிறது என்று புவியியல் ஆதாரங்கள் காட்டுகின்றன. இப்பாலம் பற்றிய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கருத்து: இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையே இந்தப் பாலம் 18.5 மைல் நீளம் கொண்ட ஈரப்பசையற்ற மணலாலும் பாறைகளாலும் ஆன ஒரு குறுகிய தொடர்ச்சியான திட்டு என்று தெரிவித்துள்ளது.
புவியியல் சூழ்நிலைகள் :
65,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் மாறி மாறி உயர்ந்து தாழ்ந்த காரணத்தால், இந்தியாவும் இலங்கையும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. 27,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் உயர்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் நிலத்தால் தொடர்பு இன்றி பிரிந்தன. 17,000 ஆண்டுகளுக்கு முன்னர் மறுபடியும் கடல் மட்டம் குறைந்ததால், இரு நிலப் பகுதிகளும் ஒன்று சேர்ந்து மறுபடியும் பிரிந்தன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக புவியியல் அறிவியல் துறைமேற்கொண்ட ஆய்வு, 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு அருகே கடல் இருந்தது என்று தெரிவிக்கிறது. புவியியல் சோதனைகளின்படி, கடலின் ஆழ்நிலையில் மணலும், சுண்ணாம்புக் கற்களும் படிந்துள்ளதாகத் தெரிகிறது.
எதுதான் நிஜம்?
ஆற்று முகத்துவாரத்தில் நீர்வரத்து குறைந்த காலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. ஆற்றில் கலந்து வரும் மணல் தங்கும் வேகத்தைவிட குறைவான நீரோட்ட வேகம் இருந்தால் இத்தகைய திட்டுகள் உருவாவது இயல்பு. இதுபோன்ற திட்டு ஆழம் குறைந்த கடல்களிலும் உருவாகின்றன. அலையின் வேகம், கடல் மேற்பரப்பு, நீரோட்ட வேகம் குறைவாக உள்ள நேரங்களில் மணல் தரையில் சேர்ந்து, திட்டுகளாகின்றன. வேகமாக நீர் ஓடினாலோ, அலை அடித்தாலோ கலங்கியிருக்கின்ற சேற்று மணல் நீரோடு சேர்ந்தோடும். நீரின் வேகம் குறைவாக இருந்தால் சேற்று மணல் நிலத்தில் தங்கி திட்டுகளாகும்.
வங்காள விரிகுடாவில் கார்த்திகை - தை மாதங்களில் வலசை நீரோட்ட காலத்தில் கங்கையின் வெள்ளம் வண்டலுடன் சேர்ந்து இலங்கைக் கரையோரம் வரை கலங்கிவரும். இடசை நீரோட்டக் காலத்தில் (வைகாசி - ஆவணி) அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவுக்கு பாக் நீரிணை வழியாக வண்டல் மணல் கலந்த நீர் பயணிக்கும், எதிரெதிர் நீரோட்டங்கள் நிகழ்வதால் பாக் நீரிணையின் இரு எல்லைகளிலும் திட்டுகள் இருக்கின்றன. இவை வடக்கே கோடியக்கரையிலிருந்து தெற்கே யாழ்ப்பாணம் வரை நீளும் மணல் திட்டும் ஆகும். அத்தகைய ஒரு திட்டு மனிதனால் அமைக்கப்பட்டவை என்று கூறுவது அதீத கற்பனை. புவியியல் நிகழ்வுகளுக்கு கற்பனை வளமூட்டிய உலகம் முழுவதுமுள்ள பல எடுத்துக்காட்டுகளுள் இதுவும் ஒன்று. தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டியிருந்தால் வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|