நீதிக்குத் தண்டனை!
பாவலர் பல்லவன்
நீர்வழி கண்களோடும்
நெருப்பெரி நெஞ்சத்தோடும்
சீர்கலை கூந்தலோடும்
சினங்கொண்ட தோற்றத்தோடும்
நேர்நின்று நீதி கேட்க
நெருங்கினாள் சென்னைக் கோட்டை!
ஆரடா வாயில் காப்போன்?
அரசியை வரச்சொல் என்றாள்!
நிலைதடு மாறிக் காவல்
நின்றவன் ஓடிச் சென்று
சிலைநிகர் வீரப் பெண்ணைச்
செங்கனல் தகிக்கும் கண்ணைத்
தலைவியின் முன்னுரைத்தாள்!
தயங்கியே அரசி வந்தாள்!
தலைதூக்கிச் சீறும் நாகம்
தன்னெதிர் நிற்கக் கண்டாள்!
வாழ்வினை இழந்தவள் நான்!
வழக்கினில் வென்றவள் நான்!
ஊழ்வினை என்ற டங்கி
ஊமையாய்க் கிடந்தி டாமல்
தாழ்வினில் என்னைத் தள்ளித்
தாலியைப் பறித்து விட்ட
கீழ்மைசெய் பாண்டி வேந்தன்
கீழ்விழச் செய்தவள் நான்!
மன்னனை எதிர்த்து அன்று
மறுத்தெவர் பேசக் கூடும்?
மண்ணிலே தலைபுதைத்து
மதயானை கால்மிதிக்க
கண்முன்னே கண்டு வக்கும்
கடுங்கோன்மை ஆண்ட நாளில்
பெண்நானே கோட்டை சென்று
பேரரசை நீதி கேட்டேன்!
பெண்ணென்றால் அடுப்படிதான்!
பேசிடா மடந்தையேதான்!
கண்ணவனைக் காப்பவள்தான்!
கட்டிலுக்கு மட்டுமேதான்!
கண்மூடிக் கருத்தை எல்லாம்
கனல்மூட்டி எரிக்க வேண்டும்!
பெண்ணென்றால் கண்ணகிதான்!
பிறர்பேச வாழ்ந்தவள்நான்!
பெரும்புகழ் சேரன் சென்று
பிதற்றிய வடவர் வென்று
இருமன்னர் தலைசுமக்க
இமயத்தில் கல்லெடுத்தான்!
உருவமாய் எனைவடித்தான்!
உலகினை வணங்க வைத்தான்!
இருந்தமிழ் மொழியில் என்னை
இளங்கோவே கவிவடித்தான்!
புராணங்கள் பேசிப் பேசிப்
புரட்சியே பூக்கா மண்ணில்
வராமல் வந்த என்னை
வாழ்தமிழ் மொழியில் ஏந்தித்
தெருவெலாம் முழங்கி வந்தார்
திருத்தகு சிலம்புச் செல்வர்!
திரையினில் எனது வாழ்வைத்
தீட்டினார் கலைஞர் கோமான்!
சிற்பத்தில் வாழ என்னைச்
செதுக்கினார் பூம்புகாரில்!
கற்களில் சிலப்பதிகாரக்
கதையினைப் படித்தார் மக்கள்!
நிற்கின்ற புயலாய் என்னை
நிறுத்தினார் கடலோரத்தில்!
சொற்கேட்டாய் சோதிடத்தால்
சோதித்தாய் என்னை நீயே!
தாழ்விலாத் தமிழில் என்னைத்
தனிக்காவிய மாக்கினாலும்
வாழ்த்தியே வணங்கி னாலும்
வரலாறு போற்றி னாலும்
வாழ்விழந்த பெண்ணாய் என்னை
வாஸ்துக்கண் கொண்டு பார்த்தாய்!
கீழ்ச்செயல் செய்தாய்! மக்கள்
கிளர்ந்தெழுந்தால் என்ன ஆவாய்?
மாண்புடை தமிழ்ப்பண் பாட்டின்
மங்காத சின்னம் ஆனேன்!
காண்பவர் கைகுவிக்கும்
கலாச்சார வடிவம் ஆவேன்!
பாண்டியன் என்னை மோதி
மாண்டதை அறியும் நாடு!
ஆண்டிட என்னைத் தீண்டி
அழியாதே எச்சரிக்கை!
காலத்தைப் பதிவு செய்த கவிதை இது...
கண்ணகிக்குக் குரல் கொடுத்த பாடல் இது... (ஜனவரி 2002 தாகம்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|