சாணக்கியன் ஒரு முட்டாள்
கவிஞர் பல்லவன்
படர்ந்து அடர்ந்து
பரந்து விரிந்து
தழைத்து செழித்து
கிடக்கும்
அத்துவான காடு!
வெயில் நுழைய
முடியாத
வெப்பம் அறியாத
அந்தக் காட்டில்
இலட்சோப இலட்சம்
பறவைகளும்
விலங்குகளும்
சாம்ராஜ்யம்
நடத்திக் கொண்டிருந்தன.
அந்தக்
காட்டில்தான்
சபதக்காரன்
சாணக்கியன்
தலைமறைவாகத்
திரிந்தான்!
காய் கனி கிழங்கு
இலை தழை உண்டு
பசியாறி வந்தான்!
வாய்க்கு ருசியாக
ஏதாவது சாப்பிட
வேண்டும் என்கிற
உணர்வு அவனை
அந்தக் காட்டோரக்
கிராமத்தின் பக்கம்
போக வைத்தது!
அதோ அந்தக்
குடிசையின் மீது
பனிமூட்டம் போல்
புகை மூட்டம்
படர்ந்திருக்கக் கண்டான்!
ஆளரவம் ஏதும் இல்லை!
அந்தப் பக்கத்தில்
கிழவி ஒருத்தி
அடுப்பில் எதையோ
கிளறிக் கொண்டிருந்தாள்!
பசி வந்திடப் பத்தும்
பறந்தது!
குடலைப்
பிடுங்குகிறது பசி
சாப்பிட ஏதாவது
கொடுங்கள்!
கிழவியிடம் கெஞ்சினான்
சாணக்கியன்!
பசி அவன் கண்களில்
எரிந்து கொண்டிருப்பதைக்
கிழவி கண்டு பதறினாள்!
கொதிக்கும் கூழைத்
தட்டில் ஊற்றி
நீட்டினாள்.
ஆற அமர
உண்ணக்கூட
அவனிடம்
பொறுமை இல்லை!
சட்டென்று
தட்டின் நடுப்பகுதியில்
கைவைத்துக்
கூழை அள்ளினான்!
அவ்வளவுதான்
சுடக்கூழ் அவனது
கையை வேகவைத்தது!
கையை உதறி
விரல்களை வாயால்
ஊதினான்!
விலாநோகச்
சிரித்தாள் கிழவி.
வெட்கமடைந்த
சாணக்கியன்
ஏன் பாட்டி
சிரிக்கிறாய்? என்றான்!
மகத நாட்டில்
இரண்டே இரண்டு
முட்டாள்கள்
இருக்கிறார்கள்.
ஒன்று நீ!
மற்றொருவன்
சந்திரகுப்தன்!
கேலி பேசினாள்
கிழவி.
சாணக்கியனுக்கு
என்னவோபோல்
ஆகிவிட்டது!
கிழவி பேசினாள் -
பகைநாட்டானின்
எல்லை ஓரங்களைப்
பிடித்தவாறே
முன்னேறி
நடு நாட்டைப்
பிடிக்காமல்
எடுத்த எடுப்பிலேயே
நடுநாட்டின் மீது
போர் தொடுத்ததால்
தோற்கடிக்கப்பட்டான்
சந்திரகுப்தன்!
அவன் முதல் முட்டாள்!
எவனோ ராஜகுரு
சாணக்கியனாம்
அவன் வகுத்துக்
கொடுத்த தவறான போர்முறையால்
நாடு பகைவனிடம்
சிக்கி விட்டது!
அந்தச் சாணக்கியன்
மட்டும் என்னிடம்
கிடைத்தால்
விளக்குமாற்றால்தான்
விசாரிப்பேன்!
கிழவியிடம்
கொப்பளிக்கும்
கோபம் சாணக்கியனைத்
தகித்தது;
தடுமாற வைத்தது.
தட்டில் ஊற்றிய
சுடக்கூழை
எப்படிச் சாப்பிட
வேண்டும் என்றுகூடத்
தெரியாமல் நடுத்தட்டில்
கைவைத்து
சூடுபட்ட நீ
இரண்டாம் முட்டாள்!
ராஜதந்திரி மதியூகி
உடம்பெல்லாம் மூளை
மூளை முழுவதும் அறிவு
அஞ்சத் தகுந்த அறிவாளி
என்று பலரால் புகழப்பட்ட
சாணக்கியனைக்
முட்டாளாக்கி
விட்டாள் கிழவி.
ஆனையும் அடிசறுக்கி
விழும் என்பது
இதுதானோ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|