உன்னோடு பெரிய ராமாயணமாய்ப் போச்சு: இளவேனில்
மக்கள் தம் பேச்சினிடையில் வெறுப்படையும் போதெல்லாம் தம் மோடு எதிராடுபவனைப் பார்த்து, ``உன்னோடு பெரிய இராமாயண மாய்ப் போச்சு'' பேசுவதை நிறுத்து எனச் சலித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இவ்வாறு கல்லாத மக்களும் இராமாயணத்தைப் பற்றிப் பேசுவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
உன்னோடு பெரிய பாரதமாய்ப் போய்விட்டது என்று ஏன் பேசுவதில்லை.
இராமாயணத்தைவிட பாரதம் நான்குமடங்கு பெரியநூல். பெரிய நூலைக் குறிப்பிடாமல் அளவில் கூறிய இராமாயணத்தின் பெயர் சொல்லி ஏன் சலிப்படைகிறார்கள்?
கதை கேட்பதிலும் ஒரு ஒழுங்கு கல்லாத மக்களிடையிலும் நிலவுகிறது. ஒரு கதை முடிந்தபின் மீண்டும் நீண்டு செல்லக்கூடாது. ஒரு கதையில் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து அமைதியான சூழ்நிலை ஏற் பட்ட பிறகு மீண்டும் சிக்கல்களும் துன்பங்களும் தொடரக்கூடாது.
அப்படி நேர்ந்தால் அது இரண்டாவது கதையாகிவிடும். இரண்டாவது கதை சேரும் போது முதல் கதையின் சுவை குறைந்து மறைந்து போகிறது. இரண்டாம் கதையிலாவது மீண்டும் சிக்கல்கள் தீர்ந்து இன்பமான சூழலில் கதை முடிந்திருக்க வேண்டும்.
இராமாயணத்தில் அதுவும் இல்லாத இதுவும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலை காணப்படுகிறது. அதனால்தான் கம்பர் உத்தர காண்டத்தை நீக்கி விட்டு இராமன் முடிசூட்டிக் கொள்வதோடு கதையை நிறுத்தி முற்றுப்புள்ளி வைத்துத் தமிழில் கம்பராமாயணம் இயற்றினார்.
தமிழில் உத்தரகாண்டம் எழுதிய ஒட்டக் கூத்தர் சீதையின் நேர்மை வெற்றி பெறவில்லையே எனும் வருத்தத்தில் ``உண்மையாற் பயன் ஒன்றில்லை'' என வருந்தியுள்ளார். இராமன் மூடிசூட்டிக் கொண்ட பின் கதையில் அமைதி திரும்பியது. அதன்பிறகு இராமன் சீதையைக் காட்டுக்குத் துரத்தியதால் பெருகி வந்த துன்பங்களின் தொடர்ச்சி கதை கேட்போர்க்குச் சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கி விட்டது.
அதுவும் கடவுள் கதையிலா இப்படி என ஒரு புறக்கணிப்பும் வியப்பும் மக்கள் மனதில் நிழலாடின. வால்மீகி எழுதிய இராமா யணத்தின்படி இராமன் ஆற்றில் விழுந்து இறந்தான். கடவுள் காப்பியம் அவலத்தில் முடிந்தால் அது கடவுளுக்குரிய பேராற்றல் தன்மையைக் கேள்விக்குரியதாக்கிவிடும். கடவுள் கதை எப்பொழுதும் வெற்றியில் முடிய வேண்டும். இராமன் தன்னை மாய்த்துக் கொள்வதால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாத கோழையின் செயல்போல் தோன்றுகிறது. பகைவனோடு போராடி இறந்திருந்தால் உலகம் பாராட்டியிருக்கும்.
இராமனின் செயல் ஒரு வீரகாப்பியத்துக்குரிய இலக்கணமாக அமையவில்லை. இதனால் கதை கேட்போருக்குக் குழப்பமே மிஞ்சுகிறது. அதனால்தான் பொதுமக்கள் பேசும் போது உன்னோடு பெரிய இராமாயண மாய்ப் போய்விட்டது என்கிறார்கள்.
குறிக்கோள் இல்லாததும் வலுத்த எதிர்ப்புகளின் இடையிலும் நல்லவற்றை நிலைநாட்டும். முயற்சி இல்லாததும் ஆகிய கதைகளை மக்கள் விரும்புவதில்லை. அதனால்தான் எந்தக் கதையைக் கேட்டாலும் கேட்கலாம்.
இராமாயணக்கதையைப் பொருத்த வரையில் அதனைப்பற்றி மட்டும் எதுவும் பேசாதீர்கள். ஏனெனில் அதில் ஒரு கதைக்குரிய இலக்கணம் சீராக அமையவில்லை என்கிறார்கள்.
இலக்கியத்திறனாய்வு மேனாட்டில் நன்கு வளர்ந்தது சென்ற நூற்றாண்டில்தான்.
ஆனால் கல்லாத மக்களிடையில் இத்தகைய திறனாய்வுத் தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கிறது.
கல்லாத மக்களும் காரணகாரியத்தோடு சிந்திக்கிறார்கள் என்பது இதனால் புலப்படுகிறது. இந்தச் சிந்தனை வால்மீகிக்கு ஏன் புலப்படவில்லை என்பதற்கும் காரணம் உள்ளது. தென்னாட்டில் இலக்கியமரபு முதல் தமிழக் கழகக் காலத்திலேயே தோன்றி விட்டது.
வடமொழியில் முதல்காப்பியம் படைத்தவனே ஒருவன்தான் வால்மீகி. அதனால் வால்மீகியைக் குறைகூற இயலாது என இலக்கியத் திறனாய் வாளர் கூறுகின்றனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|