பிறை நிலா
கவிஞர் கை. திருநாவுக்கரசு
ஆத்தி சூடி ஒளவையென
வளைந்தாய் - முகில்
ஆடையினை விண்வெளியில்
களைந்தாய் - அன்று
அங்கவைக்கும் சங்கவைக்கும்
ஆறுதலைத் தந்திடாமல்
இருந்தாய் - துயர்
மருந்தாய்!
பூத்திருக்கும் வான்மலரில்
கள் நீ! - ஓரி
போர் முகத்தில் வைத்திருந்த
வில் நீ! - ஓ!
பொன்னிலவே உன்னைவிடத்
தென்புலத்தில் மூத்த மங்கை
தமிழே - எங்கள்
அமிழ்தே!
பத்தழகு வைத்தியன்று
பாடும் - தமிழ்ப்
பாவலரின் நெஞ்சமுனை
நாடும்! - அன்று
செத்தபின்னும் ஈந்தகாயல்
செல்வமகன் கைகளெனச்
சிவந்தாய்! - மனம்
கவர்ந்தாய்!
இத்தரையில் காதலர்கள்
தோற்று - அதை
எண்ணி எண்ணி விட்டவெம்மைக்
காற்று - உயர்
பத்தரைப்பொன் முத்திரை உன்
பாலுடலில் தான்படிந்து
களங்கம் - போல
விளங்கும்!
ஈபவரின் செல்வமென
வளர்வாய்! - அந்த
இன்சிலம்பின் வாழ்த்திசையில்
மலர்வாய்! - நீ
இவ்வுலக வாழ்வுதனை
ஈங்கெடுத்துக் காட்டுமொரு
பாடம்! - வெள்ளி
ஓடம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|