உப்புக் காகிதம் வைத்திருக்கும் கவிஞன்
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
சொரசொரப்பான
சொற்களைக்கொண்டு கவிதை செய்யலாம்
சொற்களை அவற்றின் மேற்பரப்பிலேயே
உணர்தல் சாத்தியம்
சொற்கள்
கனவுகளைத் தொடும்போது
தூக்கத்தால் கவனிக்க முடியும்
மரணத்தை வருணிக்கும் போது
உயிர்மீது இதமான கீறல்கள் விழும்
இரவின் கரங்களைப் பற்றிக்கொண்டு
அவை
என்ன பேசினாலும் மறைந்த பகலாலும்
கேட்க முடியும்.
ஓடையின் ஓரத்தில் ஒரு
சொர சொரப்பான சொல் விழுந்தால்கூட
உள்ளே கிடக்கும்
எல்லாக் கூழாங்கற்களுக்கும் தமக்குச்
செதில்கள் இருந்தது
ஞாபகத்துக்கு வந்துவிடும்.
சிரைக்கப்பட்ட வார்த்தைகளின்
வழுவழுப்பில்
வழுக்கிவிழுந்து விடுகின்றன அர்த்தங்கள்
வண்ணங்கள் சுரண்டப்பட்ட
வானவில்லில் வளைவுமட்டுமே மிச்சமாகும்!
கணுக்கள் மழிக்கப்பட்ட
கரும்பிலிருந்து இனிப்பு
வெளிநடப்புச் செய்துவிடும்
சொரசொரப்பு
சொற்களின் அர்த்தமல்ல
ஆனால் சொற்கள் அதை இழந்தபின்
வாழ்வது வாழ்க்கை அல்ல
காயம்பட்டு விழுந்த
குளிரிடம் கேட்டால் சொல்லும்
‘கம்பளியின் முள்களன்றிக்
காரணம் அதன் கனம் அல்ல’
சொரசொரப்பாய் இருந்து
வார்த்தை தொடுவது, கவிதைக்கு
உறைக்கவேண்டும்
கவிதை தொடுவது
படிப்பவனுக்கு உறைக்கவேண்டும்
உப்புக் காகிதம்
கைகளில் வைத்திருக்கும் கவிஞன்
சவப்பெட்டி தயாரிக்கப்
போகலாம்
கவிதை பிழைத்துக்கொள்ளும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|