வர்த்தகச் சூதாடிகளின் கவர்ச்சித் தேடல்
எதையும் பணமாக்குவதையே நோக்கமாகக் கொண்ட வர்த்தகச் சூதாடிகளிடம் அகப்பட்டுக் கொள்ளும்போது கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், அரசியல் எல்லாமே மானக்கேடான விஷயமாகி விடுகின்றன.
ஏதென்ஸ் என்றும், ஸ்பார்ட்டா என்றும் நாட்டு எல்லைகள் பிரிந்து, ஆதிக்க சக்திகளின் போர்க்களமாகி, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், அடிமைப்பட்டும், வாழ்க்கை என்பதே மீளமுடியாத ஆயுள் தண்டனையாகிப் போயிருந்த நாட்களில் -
போர் வெறியர்களுக்கும், அதிகாரப் பிரியர்களுக்கும் எதிராக மனித ஒற்றுமைக்காக - நேசம் வளர்ப்பதற்காக - ஏதென்ஸ் மக்களும் ஸ்பார்ட்டா மக்களும் ஓரிடத்தில் கூடி கட்டித் தழுவிக் குதூகலித்தார்கள். அதற்கு வாய்ப்பாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்கள். வீரர்களைக் கொண்டாடினார்கள். பேதம் மறந்த மானுடம் அங்கே மலர்ந்து மணம் பரப்பியது.
அன்று அந்த மக்கள் கூடிய இடம் ஒலிம்பஸ் மலை அடிவாரம். ஒலிம்பஸ் மலை மானுட நேயத்தின் அடையாளமானது. அதன் தொடர்ச்சிதான் ‘ஒலிம்பிக் பந்தயம்’ என்று இன்று பேசப்படுகிறது.
அன்று நடந்த ஒலிம்பஸ் விளையாட்டுக்கள் எளிய மக்களின் விருப்பார்வங்களால் நடந்தன. அதனால் வர்த்தகமாகவில்லை; சூதாட்டமாகவில்லை; மர்மத் திரைகளுக்கும் வக்கிர உணர்வுகளுக்கும் இடமில்லை.
இன்றோ விளையாட்டு என்பது பெரும் முதலீடு செய்து நடத்தும் நூதனத் தொழிலாகிவிட்டது.
இந்தத் ‘தொழிலில்’ விளையாட்டு வீரர்கள் கூலித் தொழிலாளர்களே! நிரந்தரக் கூலியுடன், ‘தகுதிக்கு’ ஏற்ப உபரி வருமானமும் உண்டு என்பதால் ‘ஊக்க மருந்துகளும்’ உள்ளே நுழைகின்றன.
தேசியப் பெருமிதம், விளம்பர உத்தி, பாலினக் கவர்ச்சி என்று பல அம்சங்கள் ‘முதலாளிகளை’ உற்சாகப்படுத்தி ‘லாபம்’ கொழிக்க வைக்கின்றன.
நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் பிரிவில் ஓடிய சாந்தி என்ற தமிழ் நாட்டுப் பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பதக்கம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்கிற அறிவிப்பும் வருகிறது.
(இந்த அறிவிப்புக்குப் பின்னால் சதிவேலைகளும் உண்டு என்கிற ‘ரகசியமும்’ வெளிவருகிறது.)
காரணம்? சாந்தியின் உடல்கூறு பற்றிய ஆய்வில் அவருக்குப் பெண்தன்மை குறைவாகவும், ஆண்தன்மை அதிகமாக இருப்பதாகவும் தெரிய வருகிறதாம்.
இந்த ‘ஆய்வறிக்கைதான்’ மூலதனத்தின் வக்கிரத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.
அதென்ன ‘பெண்தன்மை’, ‘ஆண்தன்மை?’
“சாந்தி எங்கள் ‘வர்த்தகத்துக்கு ஏற்றமுறையில்’ கவர்ச்சியாக இல்லை!” - என்று வெளிப்படையாக அறிவிக்கலாமே!
சாந்தி ஒரு உழைக்கும் வர்க்கத்துப் பெண். வறுமையில் வாடும் எளிய குடும்பத்துப் பெண். கடின உடல் உழைப்பில் ஈடுபடும் பெண்களிடம் மலரிலும் மெல்லிய மனம் இருக்கும்; ஆனால், உடல் வலிமையோ உருக்கை நிகர்த்ததாகவே இருக்கும்.
சாந்தி ஒரு உருக்குமலர். கவர்ச்சித் தரிசனத்துக்கு அங்கே இடமில்லை.
பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி என்பது கவர்ச்சி வியாபாரத்துக்காகத்தானா?
... த்தூ...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|