சுமைதாங்கி
கவிஞர் பல்லவன்
அசைந்து நடந்தாள்
கருவூலப் பேழையைக்
கையேந்தியவள்போல்
நெடுமூச் செறிந்தும்
நிறைமாதக்
கருவைச் சுமந்தும்!
வலியால் துடித்து
பற்களைக் கடித்து
வியர்வையில் குளித்து
விழிநீர் உகுத்து
வீறிட்டு அலறி
விம்மி கதறி
உதிரப் பெருக்கில்
முழுதாய் நனைந்து
உள்ளம் பயந்து
உடம்பெல்லாம் தீய்ந்து
நரம்பெலாம் புடைத்து
தசை நாரெலாம் விடைத்து
வேதனை நெருப்பில்
வெந்து கருகிச்
சேயினை ஈன்று
புறந்தராமலேயே
சாய்ந்தனர் மண்ணில்
தாயும் சேயும்!
வருத்தப்பட்டுப்
பிள்ளை சுமந்தவள்
பாரத்தை இறக்கி
வைக்காமலேயே
கோரமுடிவை
எய்தியதாலே
கிராமத்து வழக்கப்படி
வருவோர் போவோர்
தலைச்சுமை இறக்கி
இளைப்பாறிப் போக
இன்னிழல் பரப்பும்
ஆலமரத்தின் அடியில்
நாட்டி வைத்தனர்
ஒரு
சுமைதாங்கிக் கல்லை!
அந்தச்
சுமைதாங்கிக்
கல்மேல்
இன்றும்
இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது
எங்கள்
கிராமத்து
மனிதநேயம்!
“வருத்தப்பட்டுப்
பாரம் சுமப்பவர்களே!
என்னிடத்தில் வாருங்கள்
இளைப்பாறுதல்
தருகிறேன்.”
ஏசுநாதருக்கு முன்பே
சொல்லிக் கொண்டிருக்கிறது
எங்கள் ஊர்
சுமைதாங்கிக் கல்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|